யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் - சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது – அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட - அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை – மாணவிகள் மேல் வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
இம்மாணவிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் - செய்திகளாகவும் வீடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட - இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துகின்றது.
மிக அண்மைக்காலமாக – மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மட்டில் அதீத அக்கறைகொண்டவர்கள் போல் செயற்பட்டு வந்த சட்டம் - இன்றுவரை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் மீது - எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் ஏன்? என்பது புரியவில்லை.
எனவே சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படவேண்டும் என்பதுடன் - வன்முறையை கையாண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள அமைதியான முறையில் அமர்ந்திருந்து தமது தரப்புக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தபோது அம் மாணவிகளின் கருத்துக்களைக் கேட்டு மாணவிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது வன்முறைகளைப் பிரயோகித்து வளர்ந்த பெண் மாணவிகள் மீது நடத்தப்பட்ட அடாவடித் தாக்குதல்கள், மாணவிகளை இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள், நீங்கள் எல்லோரும் படிக்கிறனிங்கள் பின்னர் கஸ்டப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தல்கள் போன்ற இப்படியான அடாவடித்தனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் அதப்பின்னணிகளையும் அரசியல் பின்னணிகளையும் கருத்திற்கொண்டு சட்டம் விலகியிருக்குமாகவிருந்தால் எதிர்காலத்தில் மாணவச் சிறார்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் இன்னுமின்னும் அதிகரித்துச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதே மனிதாபிமானமுள்ள மனிதர்களது கோரிக்கையாகவுள்ளது.
No comments
Post a Comment