சுன்னாகம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்த தாக கருதப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மல்லாகம் மேலதிக நீதவான் தர்மரட்ணம் கருணாகரன் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நீதவானிடம் பொலிஸார் கூறியிருந்தனர்.
இதனையடுத்தே கடும் தொனியில் பொலிஸாரை எச்சரிக்கை செய்த நீதவான் எதிர்வரும் இருபத்தி நான்காம் திகதிக்கு முன்னர் குறித்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்று, மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, இந்த வழக்கின் சந்தேக நபர்களான 4 பேர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் குறித்த கொலை சம்பவத்தை வெளிப்படுத்தி இருந்ததோடு, தமது வாக்கு மூலத்தில், வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு, 2011 ஆம் ஆண்டு நவம் பர் மாதம் 21 ஆம் திகதி புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்தோம்.
அவ்வேளை அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார், ‘மாவீரர் தினத்தை முன்னிட்டு இதனை வழங்குகின்றீர்களா?’ எனக் கேட்டனர். அதற்கு நாம் ‘இல்லை, வறிய மாணவர்கள் கல்வியைத் தொடர் வதற்காக உதவுகின்றோம்’ என்றோம். அதன் பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.தொடர்ந்து, அன்றைய தினம் இரவு எங்கள் ஐந்து பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். ஏன் எங்களைக் கைது செய்தீர்கள்? எனக் கேட்டபோது, திருட்டுக்குற்றச்சாட்டு என்று கூறினர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை செய்வதற்கென பிரத்தியேக அறை ஒன்று உள்ளது. அந்த அறைக்குள் எம்மை அழைத்து சென்றனர். அங்கு ஊரெழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுத்துறையினர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர், எம்மீது சித்திரவதைகளைப் புரியத் தொடங்கினர்.
எம்மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள். கால் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள். கைப்பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து, அந்த குழாயை மேலே தூக்கிக் கட்டினார்கள். அதன்போது எமது முழுஉடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை, கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.
இவ்வாறு மிக மோசமான சித்திரவதைகளை சுன்னாகம் பொலிஸார், எம்மீது மேற்கொண்ட னர். இதன் போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து ‘உனக்குத் தனிநாடு வேணுமா’ என கேட்டுத் தாக்கினார்கள்.பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நண்பனின் வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டி நண்பன் உயிரிழந்துவிட்டான். அதனை அடுத்து எம்மை அந்த அறையில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்திவிட்டனர்.
பின்னர், உயிரிழந்த எமது நண்பனின் உடலை கிளிநொச்சி, இரணைமடு குளத்தினுள் வீசியுள்ளனர். பின்னர் நண்பன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக மரணச்சான்றிதழ் கொடுத்து, பொலிஸார் அதனைத் தற்கொலையாக மாற்றி விட்டனர்” என தமது வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.
இதனையடுத்து நண்பரைக் கொலை செய்ததாகவும், அவர்கள் மீது சித்திரவதை புரிந்ததாக சாட்சியங்கள் குறிப்பிட்டுள்ள பொலிஸார் அனைவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த வழக்கின் போது குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனால் சந்தேக நபர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் மன்றில் கூறினர். இதன் போது கடும் கோபமடைந்த மேலதிக நீதவான் எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்
No comments
Post a Comment