Latest News

June 26, 2016

‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவியது.
by admin - 0

‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவியது.

சென்னை இன்போசிஸ் பெண் என்ஜினீயர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட நேரம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

கொலையாளி ஒரே ஆள்தான். அந்த நேரத்தில் சக பயணிகள் ரெயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களை கொண்டு எறிந்து இருந்தால் நிச்சயம் கொலையாளி பயந்து ஓடிப் போய் இருப்பான்.  ஆனால் யாரும் சுவாதியை காப்பாற்றவோ, உதவி செய்யவோ, கொலையாளியை பிடிக்கவோ எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.

திரைப்படங்களில் வருவது போன்று சுவாதி உயிருக்கு போராடும் காட்சியை கூடிநின்று வேடிக்கை பார்த்துள்ள கொடுமை மட்டும் அங்கு அரங்கேறி உள்ளது.

இதனை விமர்சித்து,  ‘சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து, வாட்ஸ்-அப்’ பில் ‘நான் தான் சுவாதி பேசுகிறேன்’ என்று உருக்கமான பதிவு ஒன்று காட்டுத்தீ போல பரவியது. அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் ....

’’இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.

எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டு தான் இறந்தேன்.

உங்களில் ஒருவருக்கு கூட அதை தடுக்க ஆண்மை இல்லையே. அவனை தடுக்காத உங்களின் கயமை கூட எனக்கு புரிந்தது. ஆனால் அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணீர் கொடுக்க கூடவா ஆள் இல்லை.

2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களை சுடவில்லையா?

பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்துப் போக சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்.

- இதுபோன்ற வாசகங்கள் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது
« PREV
NEXT »

No comments