Latest News

April 01, 2016

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக மூதூர் மக்கள் போராட்டம்
by admin - 0

இலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிராக மூதூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


மூதூர் பசுமை குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்திலும் பேரணியிலும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்ட பேரணி முடிவில் பிரதேச செயலாளரை சந்தித்து உத்தேச சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதியை கோரும் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேசத்திலுள்ள சம்பூர் பகுதியில் இந்தியா மற்றும் ஜப்பான் உதவியுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு முந்தைய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான காணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது அந்த அனல் மின் நிலையத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில் இதற்கான எதிர்ப்புகளும் வலுப்பெற்று வருகின்றன.

அந்த பகுதி மக்கள் இடம் பெயர்ந்திருந்த கால கட்டத்தில் இந்த மின் நிலையத்திற்கான இடம் தேர்வாகியிருந்தது. தற்போது அந்த பகுதியில் மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில், அவர்களுக்கும் சூழலுக்கும் இந்த மின் நிலையம் பாதிப்பாக அமையும் என சுற்றச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்குமிடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி ஓப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

512 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 500 மெகா வாட் மின் உற்பத்தியை இலக்காக கொண்டு அனல் மின் நிலையத்திற்கு 540 ஏக்கர் காணி அடையாளமிடப்பட்டது.

மக்கள் குடியிருப்பு இல்லாத காலப்பகுதியில் அனல் மின் நிலையம் தொடர்பான சுற்றுச் சூழல் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்றும், மீள் குடியேற்றத்திற்குப் பிந்தைய காலத்திற்கு அது பொருந்தாது என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

Thanks BBC
« PREV
NEXT »

No comments