Latest News

February 02, 2016

10 லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார்
by Unknown - 0

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி ஈடுபட்டிருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டம், பளை நகரில் செய்தியாளர்களிடம் திங்களன்று அவரே இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் தனது மகன் உள்ளிட்ட 7 பேரும் தங்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதிலும், இந்திய அரசாங்கமோ அதிகாரிகளோ அவற்றை கவனத்தில் கொள்ளாதிருப்பதனால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்திருக்கின்றார்கள் என்று முருகனின் தாயார் சோமணி கூறினார்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றுமொரு நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், சொந்த நாட்டு மக்கள் அவருக்காகக் குரல் கொடுப்பது உலக வழக்கம் என்று கூறிய அவர், அந்த வகையில் இலங்கையில் உள்ளவர்கள் முருகன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு உதவ முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

10 லட்சம் பேர் இலங்கையில் கையெழுத்திட்டால், அவற்றை உள்ளடக்கி ஒரு கருணை மனுவை இந்திய அரசிடம் சமர்ப்பித்து, தனது மகன் முருகன் உள்ளிட்டவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், முருகனின் பள்ளியில் ஒன்றாகக் கல்வி கற்றறவர்கள் என பலதரப்பட்டவர்களும் தனது முயற்சிக்கு உதவி புரிய முடியும் என்றும் முருகனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments