Latest News

December 01, 2015

கோத்தபாயவை கைது செய்ய பரிந்துரை
by admin - 0

சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளார்

இவர்களுக்கெதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்து நீதவான் முன்னிலையில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்தின் மஹநுவர கப்பல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கையைக் கவனத்தில் கொண்டே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிக்கை வழங்கியுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, அவன்ட் காட் நிறுவனத்தின் பணிப்பாளர் மஞ்சுள குமார யாப்பாவை மற்றும் அதற்கு உறுதுணை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரைக் கைது செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், பணச் சலவைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக பணத்தைச் சம்பாதித்தமை குற்றம் என்பதாலும் அப்பணத்தைக் கொண்டு, வேறு முதலீடுகளை இவர்கள் செய்துள்ளதாகவும் அது தொடர்பிலும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவன்ட் காட் சட்டவிரோதமான நிறுவனம் எனவும் அத்துடன், காலித் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட அவன்ட் காட் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலிலிருந்த ஆயுதங்களை கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரவேண்டும் எனவும் அவர் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். 
« PREV
NEXT »

No comments