தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்
தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலைஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது.
அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தின் நிறைவில் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்கள் அவை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றோம். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், மற்றும் அரசியல் கட்சிசார்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறோம்.
இதனுடைய முக்கியமான நோக்கம் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதும், தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரரேரணை எந்தளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதனை பார்த்துக் கொள்வதுமாக இருக்கும்.
இதற்காக இந்த அவை, இரு குழுக்களை பிரித்துள்ளது. அதில் ஒரு குழு அரசியல் தீர்வு விடயத்தையும், மற்றைய குழு தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினை விடயத்தையும் ஆராயும்.
இதனடிப்படையில் நாங்கள் தொடர்ந்தும் கூட்டங்களை கூட்டி பேசுவோம். தொடர் நடவடிக்கைகளையும் எடுப்போம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்படி அவையின் இணைத் தலைவர்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி லக்ஸ்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment