தமது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அள்ளிக் கொடுத்தவர் லிபியா சர்வாதிகாரியாக இருந்த கடாபி என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேன அண்மையில், லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்த கடாபியுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார் ராஜபக்சே. பொதுநிகழ்ச்சிகளில் கடாபியின் தோள்மீது கை போடும் நட்புடையவராக இருந்தார் ராஜபக்சே. அதனால்தான் சர்வதேச சமூகம் அவரை ஒதுக்கி வைத்தது எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து மகிந்த ராஜபக்சே இன்று வெளியிட்ட அறிக்கை: லிபிய அதிபராக இருந்த கடாபியின் தோளில் கையைப் போட்டிருந்ததால் தான் மேற்குலக நாடுகள் இலங்கையுடன் விலகியிருந்தன என சிலர் கூறுகின்றனர். ஆனால் அத்தகைய புகைப்படங்களில் என் தோள்மீதுதான் கடாபி கைபோட்டிருந்தார். 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு படுவேகமாக கரைந்து கொண்டிருந்தது. ஆனால் தேவையான நிதியை கொடுப்பதில் இழுத்தடிக்குமாறு மேற்குல நாடுகள் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுத்தன.
அப்போது கடாபியிடம் உதவி கோரினேன். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று இலங்கைக்கு 500 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்தவர் கடாபி. அந்த உதவி கிடைக்காமல் போயிருந்தால் இலங்கை பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும். இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
No comments
Post a Comment