Latest News

March 31, 2015

சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது. வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது
by admin - 0

"கல்யாணம் பண்ணிப்பார்.... வீடு கட்டிப்பார்"- இது பழசு... வெளிநாடு வந்துப்பார்"... இது புதுசு. பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம். ஆனாலும் இது ஒரு மாய வலை. சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது. வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.

நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு, வரவு, செலவு இவையெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
 


வலிக்கும்.. ஆனாலும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது. யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

அழுவோம்... ஆனாலும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால், இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

வலியென்றால் தோளில் சாயவும், சந்தோசம் என்றால் அணைத்துக் கொள்ளவும், அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். கண் எட்டும் தூரம் வரை, தனிமை மட்டும்தான் மிஞ்சும்.

நன்றாக பசிக்கும். நிறைய சாப்பிடவும் செய்வோம். ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது. ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில் ஒரு வித ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

நியாயமாக பார்த்தால், ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது போன் பண்ணி விசாரிக்க வேண்டும். ஆனாலும், அப்படி யாரும் கூப்பிட போவதில்லை என்றும் தெரியும். மறந்த உலகமல்ல... மறந்ததாக நினைக்கும் உலகம். தெரிந்தும் யாராவது விசாரிக்க மாட்டார்களா? பள்ளியில் ஒன்றாக விளையாடிணோமே அந்த நண்பன் அழைக்கமாட்டானா அன்பாக.! சொந்தம் கொண்டாடிய உறவுகாரர்கள் அழைக்க மாட்டார்களா மாப்ளே .. மச்சான் என்று... என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனாலும், குடும்பத்துல யாராவது ஒருத்தருக்கு வாரம் போன் பண்ணாமல், இருந்து பாருங்கள். நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.... "என்னப்பா, வெளிநாடு போன உடனே எங்களையெல்லாம் மறந்திட்டபோல" என்று.... அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே பதில் சொல்ல வேண்டும்!

ஊருக்கு  திரும்பி வந்தவுடன் அற்ற குளத்தின் அருநீர் பறவைபோல மீண்டும் வரும் நட்பு - உறவு மறந்த கூட்டம் மறதி என்னும் மருந்தை தடவி வாயார பேசுவோம்.  வெட்கமில்லாமல் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றதும் தலைவலி தைலம் கொடுத்து அகத்தின் நிலை சொல்லாமல் சொல்வோம்... போலி உலகமடா சாமி!

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை வெளிப்படுத்தும் இந்த வரிகளைப் படித்த பிறகாவது, நம் உடன்பிறப்புகளோ நண்பர்களோ வெளிநாடுகளில் இருந்தால், அன்பைப் பரிமாறுவோம்.... பாசம் காட்டுவோம்! 



« PREV
NEXT »

No comments