Latest News

January 26, 2015

பழிவாங்கும் படலம் தொடர்கிறது - திஸ்ஸவுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் வழக்கு?
by Unknown - 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  கைச்சாத்தாகியது என பகிரங்கப்படுத்திய முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்து போலி ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கப்படுத்தியதாக அவர்மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்கவினால் காண்பிக்கப்பட்ட ஒப்பந்தம் போலியானது என கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கையெழுத்து மோசடி தொடர்பில் திஸ்ஸ மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சாத்தியங்கள் சட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாகவும், அதன்மூலம் தனக்கு மன்னிப்பு வழங்கும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் திஸ்ஸ அத்தநாயக்க பேரம் பேச தூது விட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா செய்யும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிறிதொருவரை நாடாளுமன்றுக்குள் உள்வாங்கும் சாத்தியம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »