Latest News

October 15, 2019

முன்னணி போல் எல்லோரும் கொள்கை விடயத்தில் துணிந்து நிற்க வேண்டும்! – எம்.கே.சிவாஜிலிங்கம்
by Editor - 0

ஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது? ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், விக்னேஸ்வரன் தரப்பு அதை நிராகரிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டு விட்டார்கள்தானே என கேள்வியெழுப்பியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இன்று (15) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நடத்திய பல சுற்று பேச்சின் பின்னர், ஐந்து கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் கையெழுத்திடவில்லை. தமிழ் தெசிய மக்கள் முன்னணி கூறிய கருத்தில், வெளியேறுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறியுள்ளார்கள்.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடும்படி மக்கள் முன்னணி கேட்டது. அதை மற்றவர்கள் நிராகரித்தார்கள். முன்னணி நிராகரிக்கிறது என்றாவது இணையுங்கள் என்று கடைசியாக கேட்டிருக்கிறார்கள். அதற்கும் மற்றவர்கள் மறுத்து விட்டார்கள். அதை இணைத்திருக்கலாம். அதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது. ஏன் பயப்பிடுகிறார்கள்.

இடைக்கால அறிக்கையை ரெலோ பகிரங்கமாக நிராகரித்திருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் நிராரித்திருந்தது. நிராகரிப்பதை போன்ற கருத்தை விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி தெரிவித்திருந்தது.

இந்த கூட்டிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர்கள் வெளியில் விட்டது பொருத்தமான நடவடிக்கையாக எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கையிருக்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் பிரிந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கட்சியை தொடங்கியிருந்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் நிருபமா ராவை சந்தித்தோம். அப்போது, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்டார். ஆனந்தசங்கரி ஐயா சொல்லிக் கொண்டிருந்தபோது, இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா, “சிவாஜிலிங்கம் சார்ந்த கட்சி கொன்பெடரேசனை- சமஷ்டிக்கு மேலான கூட்டு இணைப்பாட்சியை கேட்கிறது என்றார். ஒவ்வொருவரும் தத்தமது கோரிக்கையை சொன்னார்கள். அப்போது அவர் புருவங்களை உயர்த்தி என்னை பார்த்தார்.

நான் சேர்ந்திருக்கும் எல்லா கட்சியும் அதை ஏற்க வேண்டுமென்றில்லை.

தேர்தலில் ஒற்றுமையாக நிற்க வேண்டுமென்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். அதில் நிற்க முடியாவிட்டாலும், தமிழ் மக்களின் கோரிக்கைகளிலாவது ஒன்றாக நிற்க வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்து இந்த கோரிககைகளை முன்வைத்து, அவர்கள் நிராகரித்தால் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

உங்களிடம் சில தெரிவுதான் உள்ளது. பெரிய பிசாசு உள்ளதென கூறி, குட்டி பிசாசிற்கு வாக்களிக்க கோரலாம்.

நீங்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று கூறலாம். அது கட்சிகள் காட்டும் வழியல்ல.

அல்லது தமிழர் தரப்பிலுள்ள வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளியுங்கள் என்றலாம். அல்லது, தேர்தலை பகிஷ்கரிக்க கோரலாம். ஆனால், இந்த கட்சிகள் தேர்தலை பகிஷ்கரிப்ப கோருவார்கள் என நினைக்கவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களிற்கு சரியென நினைத்ததை துணிந்து சொல்வதை பாராட்டுகிறேன். அதைபோல, எல்லோரும் கொள்கை விடயத்தில் துணிந்து நிற்க வேண்டும் என்றார்.

« PREV
NEXT »

No comments