திங்கள்கிழமை பின்னிரவில் ஒரு ஆடியோ வாட்ஸ் ஆப்பில் உலா வர ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் அத்தனை சமூக வலைத் தளங்களிலும் தீயாய் பரவ ஆரம்பித்தது. காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் சமீபத்திய குரல் பதிவு என்ற பெயரில் அந்த ஆடியோ பரப்பப்பட்டதுதான்.
சற்றே பிசிறு தட்டிய, கிட்டத்தட்ட ஜெயலலிதா பாணியில் இருந்த அந்த குரல் பதிவில் இப்படி அமைந்திருக்கிறது… “என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, என்னை வாழவைத்து கொண்டிருக்கும் அன்பு தெய்வங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!
நான் உங்கள் அன்பு அம்மா ஜெயலலிதா பேசுகிறேன். என் உடல்நலம் கருதி, எனக்காக மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மட்டும் சொந்தமாகிய என்னை கடவுள் நல்ல உடல்நலத்துடனே வைத்திருக்கிறார்.
சிறிது ஓய்வெடுத்தபிறகு, உங்கள் முன்னால் தோன்றி, விளக்கம் அளிக்கக்கூடிய அளவிற்கு திடமான உடல் நலத்துடன் ஆண்டவன் எனக்கு ஆசீர்வாதம் அளித்திருக்கிறார். ஆக, தேவையில்லாத வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க.வின் அசுரவளர்ச்சி, அரசின் அமைதியான ஆட்சி நடத்தை இவை எல்லாம் சூட்சமக்காரர்களுக்கு வேதனைத்தர, எனது சாதாரண உடல்நலக்குறைவு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆகவே, இதுபோன்ற நாகரிகமில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதமும், இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளின் அன்பும் எனக்கு இருக்கும்போது உங்களைவிட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது.
நான் ஏற்கனவே சொன்னதுபோல், ‘உங்களுக்காகவே நான் – உங்களாலேயே நான்” எனவே, சட்டசபை தேர்தலில் எப்படி அ.தி.மு.க.வை வெற்றியடையச் செய்தீர்களோ.., அதேபோல், வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி, 17-ம் தேதி அன்று நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு உங்கள் மேலான வாக்குகளைதந்து, பெருவாரியான வெற்றிகளை தரவேண்டும் என்று கேட்டு, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! நன்றி! வணக்கம்!!
மேற்கண்டவாறு அந்த ஆடியோ பதிவு அமைந்துள்ளது. முதல்முறை கேட்டபோது, சற்று உணர்ச்சி வசப்பட்டு பலரும் நம்பிவிட்டாலும், அடுத்த முறை கேட்கும்போதே இது அவ்வை சண்முகி பாணியிலான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வேலை என்பது புரிந்துவிடுகிறது. என்னதான் காவல்துறை எச்சரித்தாலும், இந்த மாதிரி ஆர்வக் கோளாறுகள் அடங்குவதாகத் தெரியவில்லை.
No comments
Post a Comment