Latest News

September 18, 2016

சிபிஐ விசாரித்து உத்தரவிடாமல் என் மகன் உடலை வாங்கமாட்டேன் - ராம்குமார் தந்தை
by admin - 0

திருநெல்வேலி: எனது மகனின் உடம்பை சிபிஐ விசாரித்து, உத்தரவு இடாமல் வாங்க மாட்டோம். சதி திட்டம் போட்டு எனது மகனை கொன்று விட்டனர். நாளை ஜாமீன் கிடைக்கும் என்ற நிலையில் இன்று சதி செய்து கொன்று விட்டனர் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் தெரிவித்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை தரப்பு கூறுகிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் ராம்ராஜூம், உறவினர்களும் கூறிவருகின்றனர்.


இதுகுறித்து மீனாட்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரின் தந்தை பரமசிவம், ''நானும், எனது மனைவியும் என் மகன் ராம்குமாரை சந்திக்க சென்று இருந்தோம். போலீஸ் அதிகாரி முன்புதான் அவனை சந்தித்து முக்கால் மணி நேரம் பேசினோம். எங்களை பார்த்தவுடன்அழுதான். ஆனால், அவன் நல்ல மன நிலையில் இருந்தான். உடலும் ஆரோக்கியமாகத் தான் இருந்தது.

நாளை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நிலையில், சதி செய்து அவனை கொண்டு விட்டனர். நாங்கள் சிபிஐ விசாரணை நடத்தி, உத்தரவு வந்த பின்னர்தான், ராம்குமார் உடலை வாங்குவோம். நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். நாங்கள் சென்னை செல்லவில்லை. எங்கள் சார்பில் சிலர் சென்று உள்ளனர். நாங்கள் பின்னர்தான் முடிவு செய்வோம்என்று தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments