Latest News

August 11, 2016

உள்ளக முரண்பாடுகளை உருவாக்கி தமிழர்களின் தேசிய இலக்கினைத் தகர்க்கத் திட்டம்!
by admin - 0

உள்ளக முரண்பாடுகளை உருவாக்கி தமிழர்களின் தேசிய இலக்கினைத் தகர்க்கத் திட்டம்!
தமிழர்கள் மத்தியில் உள்ளக முரண்பாடுகளை உருவாக்கி தமிழர்களின் தேசிய இலக்கினைத் தகர்க்கத் திட்டம், அதற்குள் நாம் சிக்கிவிடக்கூடாது என கனகாம்பிகைக்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் கிராம மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறியும் வகையிலான மக்கள் சந்திப்பு கனகாம்பிகைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் கனகாம்பிகைக்குளம் கிராமத்தின் அபிவிருத்தித் தேவைகள் குறித்து மக்களது கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் கனகாம்பிகைக்குளம் கிராமத்திற்கு மயானம் ஒன்றினை அமைப்பது தொடர்பான பிரச்சினைக்கு மக்களது கருத்துக்கள் பெறப்பட்டுத் தீர்வு காணப்பட்டது.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் குறிப்பிடுகையில், எங்களுடைய பிரதேசங்களிலே தற்போது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மெல்ல மெல்ல நடைபெறுகின்றன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இம்மக்களிடையே மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கிராமங்களுடைய உட்கட்டமைப்பு வசதிகள் மக்கள் பங்களிப்புடனேயே இடம்பெற்று வருகின்றன.

ஆனால் எமது மக்களுடைய பிரதான குறிக்கோளாக தமிழர்களுடைய தேசிய விடுதலை நோக்கிய பயணம் அமைந்து காணப்படுகின்றது. மக்களுடைய வாழ்வாதார, அபிவிருத்தி வேலைகளைப் புறந்தள்ளாத வகையில் அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஆனால் மக்களுடைய கவனம் தங்களுடைய இலட்சியத்தில் இருக்காத வகையில் அபிவிருத்தித் தீர்மானங்களில் குழப்பங்களை ஏற்படுத்த பேரினவாதிகளும் குழப்பவாதிகளும் முயற்சிக்கின்றார்கள். 

மயானத்தை அமைப்பதா இல்லையா, பொருளாதார மையம் வடக்கிலா தெற்கிலா போன்ற விவாதங்களுக்குப் பின்னாலேயே எங்களுடைய கவனங்கள் திசை திருப்பப்பட்டு எமது தேசிய விடுதலைக்கான வீச்சினைக் குறைப்பதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

சிறைக்கைதிகளின் விடுதலை, சிங்கள பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்பு, காணாமல்போனோர் பிரச்சினை, சர்வதேச விசாரணைப் பொறிமுறை பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு என்பவற்றை விட்டுவிட்டு உள்ளகக் குழப்பங்களுக்கு மக்களை ஆளாக்கி தமிழர்களின் தேசிய இலக்கிலிரு மக்களைத் திசைதிருப்புவதற்கான பாரிய சதித்திட்டங்கள் திரை மறைவில் திட்டமிடப்படுகின்றது. இவ்விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments