Latest News

August 28, 2016

ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்காக போராடுவது ஒருபோதும் அருவருப்பானது அல்ல
by admin - 0

•சேரன் அவர்களே!

ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்காக போராடுவது ஒருபோதும் அருவருப்பானது அல்ல.

மாறாக ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்காக போராடாமல் இருப்பதே அருவருப்பானது.

ஈழத் தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் பார்ப்பான் துக்ளக் சோ ராமசாமிகூட இதுவரை ஈழத் தமிழர்களை திருடர்கள் என்று கூறியதில்லை.

காட்டிக்கொடுக்கும் பார்ப்பான் சுப்பிரமணிய சுவாமிகூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தமை அருவருப்பாக இருக்கிறது என்று கூறியதில்லை.

எப்படி உங்களால் மட்டும் ஈழத் தமிழர்களை திருடர்கள் என்றும் அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது என்றும் கூற முடிந்தது?

ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டு அதரவு தெரிவித்தமைக்காகவே பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் இருக்கிறார். அவருடைய இளமைக் காலம் முழுவதும் வீணாக கழிந்துவிட்ட நிலையிலும் அவரது தாயார் இதுவரை ஈழத் தமிழர்களை ஆதரித்தது தவறு என்று ஒரு வார்த்தை கூறவில்லையே?

ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை மாய்த்தவர் முத்துக்குமார். அவருடைய குடும்பம் மிகவும் கஸ்ட நிலையில் இருந்தும்கூட அவரது தந்தையார் தன் மகன் ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தது தவறு என்று இதுவரை கூறியதில்லையே?

ஈழத்தில் இந்திய ராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக கொடைக்கானலில் குண்டு வைத்து மரணமானவர் மாறன். அவரது தந்தையாரை சந்தித்து உங்கள் மகன் ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்ததையிட்டு கவலை கொள்கிறீர்களா என நான் கேட்டபோது என் கரங்களைப் பற்றி “ இல்லை. ஒருபோதும் அவ்வாறு நினைக்கமாட்டேன்” என்று கூறினாரே!

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக தன்னை தீயிட்டு மாண்டவர் துறையூர் அப்துல் ரவூப். அவரது தந்தை இன்று வரையும் தன் மகனின் ஈகையையிட்டு பெருமை கொள்வதாகத்தானே கூறுகின்றார்!

ஈழத் தமிழனுக்காக மருதையாற்றில் வெடிகுண்டு வைத்தவர். உளவுப்படையால் அடித்துக் கொல்லப்பட்டவர். தோழர் தமிழரசன். அவரது தாயார் இன்றும் வறிய நிலையில் இருக்கிறார். ஆனால் அவரும்கூட தன் மகன் ஈழத் தமிழருக்காக போராடியதை நினைத்து அருவருப்பதாக கூறவில்லையே? 

இவர்களைவிடவா நீங்கள் போராடினீர்கள்?

இவர்களின் குடுமபத்தைவிடவா நீங்கள் கஸ்டப்படுகின்றீர்கள்?

அப்படியிருக்கையில் எப்படி உங்களால் மட்டும் இப்படி கூறமுடிந்தது?

மிகவும் வலிக்கிறது. தயவு செய்து நீங்கள் கூறியவற்றை வாபஸ் பெறுங்கள்.

இறுதியாக, 

ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று தமிழ்நாடுவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் கூறுகிறார்.

எனவே நீங்கள் உங்களுக்காக போராடுவதே ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும்.


நன்றி பாலன் தோழர்
« PREV
NEXT »

No comments