சாலாவ இராணுவ முகாம் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தற்செயலானதொன்றல்ல. அரசாங்கத்தினால் திட்டமிட்டே அந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்காலில் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்துமே அங்குதான் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்தன.
மேற்படி போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கே இந்த குண்டு வெடிப்பு நாடகம் நடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவலொன்றை போரினால் பாதிக்கப்பட்ட ஒருவர், நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியிடம் தெரிவித்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயல கத்தில் நேற்றையதினம் காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை மேற்குறித்த செயலணியின் அமர்வு நடைபெற்றது. இதன்போதே யுத்தத்தினாலும், காணாமல் போதல்கள் உட்பட பல அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது போரினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றெல்லாம் பேசும் நாங்கள் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து நாம் ஆராயவில்லை. பிரபாகரன் நச்சு ஆயுதங்கள் மூலமே தாக்கப்பட்டார்.
இந்த நிலையே இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கும் நடைபெற்றது. யுத்தத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், இவர்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பதற்கு புலிகள் காரணமாக இருந்திருந்தாலும்,
ஏனைய பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு இராணுவமே காரணமாகும். போரில் இரசாயன ஆயுதங்கள், கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் எல்லாவற்றையும் இராணுவம் பயன்படுத்தியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் இதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தவிர போராளிகளை மயக்க நிலையில் அல்லது சுயநினைவு அற்ற நிலையில் வைத்திருக்கும் ஆயுதங்களும் இராணுவத்தினரால் வீசப்பட்டுள்ளதென குறிப்பிட்ட அவர்,
இவ்வாறு இந்த குண்டுகள் வீசப்பட்டதும் போராளிகள் சுய நினைவு அற்ற நிலைக்கு சென்றுவிடுவதாக வும் அப்போது இலங்கை இராணுவம் அவர்களை கடத்தி சென்று சித்திரவதை செய்ததாகவும் புதிய தகவலொன்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் அவை பெறப்பட்ட வழி முறைகள், அதற்கான ஆவணங்கள் எல்லாமே சாலாவ இராணுவ முகாமில்தான் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை தடயமில்லாமல் அழிப்பதற்கே இந்த குண்டு வெடிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
குறித்த இராணுவ முகாமில் இராண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவம் இருந்ததாக கூறப்படும் நிலையில், இரு இராணுவ சிப்பாய்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இந்த பாரிய வெடிப்பில் கொல்லப்பட்டது இரு இராணுவத்தினர் தான் என்றால் ஏனையவர்கள் எவ் வாறு தப்பித்து சென்றனர்? அல்லது முற்கூட்டியே தப்ப வைக்கப்பட்டார்களா? என கேள்வி எழுப்பிய அவர்,
எமக்கு எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர் பில் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே நீதி கிடைக்க வேண் டும், அந்த சர்வதேச விசாரணையின் மூலமாகவே எமக்கான நீதியும் கிடைக்க முடியும். உள்நாட்டு நீதித்துறைகள் பற்றிய நடுநிலைமைகள் தொடர்பில் நாங்கள் பல இடங்களில் கற்றுவிட்டோம். இனியும் எம்மால் ஏமாற முடியாது என அவர் உறுதியுடன் கூறினார்.
No comments
Post a Comment