Latest News

March 10, 2016

போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் பிரபாகரன் உயிருடன்-சரத் பொன்சேகா
by admin - 0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சரத் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

போர் முடிவுற்றதாக கூறப்படும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தார். அதனை அறிந்தும்கூட அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச போர் முடிவுற்றதாக அறிவித்துவிட்டார். ஆனால் அன்றைய தினம் நடந்ததை நானும் அறிவேன்.

யுத்தத்தை வெற்றிகொண்ட பெருமையை அடைவதற்காக திட்டமிட்டபடி என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். நான் நாடு திரும்பியவுடன் என்னை அலரிமாளிகைக்கு அழைத்து முப்படைகளின் தளபதி என்ற பதவிலியிருந்து விலகுமாறும் கடும் அழுத்தத்துடன் தெரிவித்தனர்.

அத்துடன் நாடு திரும்பிய மஹிந்த ராஜபக்ச யுத்த வெற்றியை தம்வசப்படுத்திக்கொள்ளும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்தமிட்டார்.

கோத்தபாய  ராஜபக்சவும் யுத்த வெற்றியை தன்வசப்படுத்திக் கொள்ளும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார்.

1990ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகியவர் எவ்வாறு போர் வெற்றிக் கிரீடத்திற்கு உரிமை கொண்டாட முடியும் எனவும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். 

மேலும் மேலும் வௌ்ளைக்கொடி விவகாரத்தில் மூன்று வருடங்கள் தான் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானதாகவும், இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிய கட்டாயம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments