அநுராதபுரம் – கடபனஹா பிரதேசத்தில் களியாட்ட விடுதி உரிமையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 15 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்
20 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.
முகத்தை மறைத்து கொண்டு வாள் மற்றும் பொல்லுகளுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தும் விதம் CCTV கமராக்களில் பதிவாகியிருந்தது
இந்த தாக்குதலில் தற்காப்பு கலை வீரர் வசந்த டி சொய்சா உயிரிழந்ததுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரும்பு பொல்லு ஒன்றும், மேலும் 4 பொல்லுகள் , கோடரி மற்றும் முககவசங்கள் என்பவை அநுராதபுரம் வாதாகட வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கார், முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட வசந்த டி சொய்சாவின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
57 வயதான இவர் தற்காப்பு கலை வீரர் என்பதுடன் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment