கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவல் 23 மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது. ஆங்கிலம் உட்பட 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் இந்நூல் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் வைகை அணை கட்டப்பட்ட போது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வீகக் கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம்.
மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை சிறப்பாக எடுத்தியம்பும் படைப்பு இது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட இந்த நாவல் 2003 ஆம் ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாடமி விருது பெற்றது.
இதுவரை 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதுடன், லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு முன்னாள் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர முன்னாள் மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment