ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையின் காரம் குறைவதற்கு எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணமாகும். நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் மாறியிருக்காவிட்டால் பாரதூரமான அறிக்கை வெளிவந்திருக்கும். நாம் கடந்த 8 மாத காலமாக மேற்கொண்ட வேலைத்திட்டங்களினாலேயே இத்தகைய அறிக்கை வெளிவந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாம் செல்லவேண்டிய பயணம் நீண்டதூரமாக உள்ளது.
இதற்கு மஹிந்த இல்லாத அரசாங்கம் தான் வேண்டும். மஹிந்தவின் அரசாங்கம் இன்று ஆட்சியிலிருந்திருந் தால் பாரதூரமான நிலை நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும். நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினாலேயே ஐ.நா. அறி க்கை காரம் குறைந்து வெளிவந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக வெளிப்படையான வெளிநாட்டுக்கொள்கையினை நாம் பின்பற்றினோம். சகலரது ஆதரவையும் பெற்று செயற்பாடுகளை மேற்கொண்டோம். சர்வதேச ரீதியில் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உட்பட சர்வதே நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினோம்.
நாட்டில் ஜனநாயகத்தை மேலோங்கச் செய்யவும் மனித உரிமைகளை பாதுகாக்கச் செய்யவும், நடவடிக்கைகளை மேற்கொண்டோம். சர்வதேச ரீதியிலும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கிடைத்தன. 19 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைத்தோம். பாராளுமன்றத்தில் சகலரது ஒத்துழைப்பையும் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்றினோம்.
தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை காரம் குறைந்தநிலயில் வந்துள்ளது. இதற்கு எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணமாகும். உள்ளக விசாரணைகளுக்கு மஹிந்தராஜபக்ஷவே வித்திட்டார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் செய்து கொண்ட இரு தரப்பு உடன்படிக்கையின் மூலம் உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அரசாங்கமே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் யோசனையையும் நிறைவேற்றியது.
ஐ.நா. மனித உரிமையின் அறிக்கை இவ்வாறு வெளியானமைக்கு அரசாங்கம் மாறியதும் அரசாங்கத்தின் நடவடிக்கையுமே காரணமாகும். நாம் ஆட்சியமைத்ததும் மனித உரிமையினை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம். தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய நல்லிணக்க குழுவினை அமைத்தோம். தேசிய சமாதான செயற்பாடுகள் தொடர்பிலும், நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இத்தகைய நடவடிக்கைகளே ஐ.நா. அறிக்கை இவ்வாறு வெளியாகியுள்ளமைக்கு காரணமாகும்.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம் பெற்ற தேர்தலில் நான் வெற்றிபெற்றிருக்காவிட்டால், அல்லது அரசாங்கம் மாறியிருக்காவிட்டால் பாரதூரமான அறிக்கை வெளிவந்திருக்கும். எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களினாலேயே காரம் குறைந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செயற்பாடுகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் நீண்டதாக உள்ளது. மஹிந்தவின் அரசாங்கம் இருந்திருந்தால் பாரதூரமான நிலை நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும்.
இனவாத சக்திகள் இன்னமும் செயற்பட்டு வருகின்றன. இத்தகையவர்களது செயற்பாட்டை முறியடிக்கவேண்டும். இனவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் குறித்தும் அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். புதிய அரசாங்கத்தின் கொள்கையும், செயற்பாடுமே ஐ.நா.வின் அறிக்கை பாரதூரமாக அமையாமைக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
நாம் சர்வதேச விசாரணைக்கோ, அல்லது உள்ள விசாரணைக்கோ முகம் கொடுத்தே ஆகவேணடும். இது குறித்த தீர்மானம் ஒன்றுக்கு நாம் வரவேண்டும். இவற்றை நிராகரித்துவிட்டு ஐ.நா.வுக்கு நாம் முகம் கொடுக்க முடியுமா? இதனால் தான் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு நாம் உடன்பட்டுள்ளோம் என்றார்.
பிரதமர் கருத்து
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை என்றோ, இலங்கையில் யுத்தக்குற்றம் இடம் பெற்றதாகவோ, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எவரது பெயர்களும் குறிப்பிடப்படவும் இல்லை. விசேட கலப்பு நீதிமன்றம் குறித்து பேசப்படுகின்றது. பரணகம அறிக்கை, மற்றும் உடலகம அறிக்கை, என்பவற்றை ஆராய்ந்து இவ்விடயம் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு கருத்துத் தெரிவித்தார்.
ஐ.நா. அறிக்கை தொடர்பில் ஊடகங்களின் நிலைப்பாடு என்ன என்பதே எனது பிரச்சினையாக உள்ளது.
ஐ.நா. அறிக்கையில் யுத்தக் குற்றம் இடம் பெற்றதாக கூறப்படவில்லை. நாம் நாட்டை மீட்டெடுத்துள்ளோம். நாட்டின் நீதித்துறை இந்த நிலைக்கு செல்வதற்கு யார் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. தற்போதைய நிலையில் அமெரிக்கா, பிரேரணையொன்றை ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரவுள்ளது. அந்தப் பிரேரணையைப் பின்பற்றி நாம் முன்செல்லவேண்டும். நாம் இராணுவத்தினரை காப்பாற்றியுள்ளோம். அறிக்கையில் எவரது பெயர்களும் இடம் பெறவில்லை.
இலங்கையும் ஐ.நா. வும் ஒன்றாக இணைந்து வேலை செய்யும் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எதிராக செயற்படுகின்றனர். நாம் ஒன்றிணைந்து வேலைத்திட்டத்தை செய்யவேண்டும்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார். அவரை நானும் சம்பந்தனும் சந்திப்பதற்கு விரும்பியிருந்தோம். ஆனால் அதற்கு அன்றைய அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதனால் பான் கீ மூனை அவர் புறப்படும் போது விமான நிலையத்தின் விருந்தினர் அறையில் சந்தித்துப் பேசியிருந்தேன். இதன் போதே உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை நான் அறிந்தேன். இதேபோல் அமெரிக்காவில் ஐ.நா. விசாரணையாளர் தர்ஸ்மனை சந்தித்த அரசாங்கப் பிரதிநிதிகளான மொஹான் பீரிஸ், பாலித கொகன ஆகியோர் உள்நாட்டில் குற்றவியல் சட்டங்களுக்கு இணங்க விசாரணைகள் இடம் பெறும் என்று உறுதிவழங்கியிருந்தனர்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஹுமாவும் எமக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்.
சகல கட்சி பிரதிநிதிகளை அவர் சந்திக்க விரும்பியபோதிலும் அதற்கும் அன்றைய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அந்த விடயமும் முன்னோக்கிச் செல்லவில்லை என்று கூறினார்.
No comments
Post a Comment