Latest News

September 16, 2015

இலங்கை அறிக்கை-'தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேறலாம்!
by Unknown - 0

இலங்கை குறித்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையின் மீதான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரின் இறுதியில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்கிறார் கவுன்சிலின் பேச்சாளர் ரூபர்ட் கோல்வில்.

பிபிசி தமிழோசையிடம் இது குறித்து பேசிய கோல்வில், இது ஒரு பெரிய அறிக்கை. 9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விஷயங்களை அது பரிசீலிக்கிறது. அது எப்படி இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பார்க்க்கவேண்டும். பின்னர், ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் ஒரு தீர்மான வரைவு முன்வைக்கப்படும். அதையொட்டி ஒரு தீர்மானத்தை அவர்கள் கொண்டுவர விரும்பினால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி, அதை அடுத்த சில நாட்களில் கொண்டுவருவார்கள் என்றார்.

இந்தத் தீர்மானம் கவுன்சில் கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் விவாதிக்கப்படும் என்று கூறிய கோல்வில் தீர்மான வரைவில் பிரச்சனை இருந்தால் கடுமையான விவாதங்கள் இருக்கும். அதில் விட்டுக்கொடுப்புகள் தேவைப்படலாம். எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார் .

ஆனால் மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானங்கள் நாடுகளைக் கட்டுப்படுத்துபவை அல்ல. அவை சட்டங்கள் அல்ல. ஆனால் அவை, உலகின் மிக உயர்ந்த மனித உரிமை அமைப்பின் கருத்து. எனவே இந்த அமைப்பில் உள்ள இலங்கையின் சக நாடுகள் அடுத்து என்ன நடக்கும் என்பதை முடிவு செய்வார்கள். அதே போல், மனித உரிமைக் கவுன்சிலில் இயற்றப்படும் தீர்மான்ங்கள் எல்லாம் ஐநாமன்ற பொதுச்சபைக்கும் கொண்டு செல்லப்படும். எனவே இது சர்வதேச நாடுகளின் கவனத்தில் இருக்கும். எனவே இந்த அறிக்கைக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் நடக்கும் என்றார் கோல்வில்.

இலங்கை இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் என்ன நடக்கும் என்று கேட்டதற்கு பதிலளித்த கோல்வில், "அதைப் பற்றி மனித உரிமைக் கவுன்சில்தான் முடிவு செய்யவேண்டும்.ஆனால் அந்த விஷயத்தில் மற்ற பலரும் தலையிடுவார்கள். சர்வதேச ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் எல்லாம் இதை கையிலெடுக்கும். இந்த விஷயம் இந்த அளவுக்கு வந்ததற்கே தன்னார்வக்குழுக்கள் ஒரு காரணம். இது முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும். இலங்கையில் நடந்ததைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அது குறித்து அனைத்து சமுதாயங்களையும் திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து, மேலே செல்ல இது ஒரு உண்மையான சந்தர்ப்பத்தை தருகிறது. அந்தப் பாதையை இலங்கை தேர்ந்தெடுத்தால் அதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய நல்லெண்ணம் கிடைக்கும்.அதை இலங்கை விரைவில் செய்யும் என்பதுதான் எங்கள் நம்பிக்கை", என்றார்.
« PREV
NEXT »

No comments