நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமான முறையில் நடைபெற்றது. இன்று காலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்றதுடன் மங்கள வாத்தியங்களுடன் ஆலய உள்வீதி வலம் வந்து 7.15 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளுனார்.
நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள தேர்முட்டியிலிருந்து திருத்தேர் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலயத்தின் திருவீதி உலாவந்து நிலையை வந்தடைந்தது.
திருத்தேர் நிலையை வந்தடைந்ததும் பச்சைசாத்தி சுவாமியை ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்ததுடன், பிராயச்சித்த அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெற்றது .
இன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் இலங்கையின் நாலா புறத்திலிருந்தும் 5 லட்சத்துக்கும் அதிகமான அடியார்கள் பங்கேற்றார்கள்.
நேற்றையதினம் நடைபெற்ற நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
நாளை காலை 7 மணிக்கு உள்வீதியிலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலம் வரும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், திங்கட்கிழமை வைரவர் மடையுடன் நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.
No comments
Post a Comment