Latest News

September 04, 2015

மக்கள் போராட்டம் வடகிழக்கெங்கும் விஸ்தரிப்பு!
by Unknown - 0

இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச குற்றவியல் பொறிமுறையை வலியுறுத்தி யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் அது வடகிழக்கு எங்கும் பரவ தொடங்கியுள்ளது.சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு இதற்கான அழைப்பினை விடுத்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளக விசாரணை பொறிமுறையினையும், விசாரணையையும், உறுதிபட நிராகரிக்கின்றோம் என்ற கோரிக்கையினை முன்வைத்து யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணி முதல்  மாலை 6 மணிவரை மத்திய பேருந்து நிலையத்திலும்;,அதே போன்று நல்லூர் ஆலய சூழல்,திருநெல்வேலி பொதுசந்தை,பருத்தித்துறை பொதுசந்தை, பொன்னாலை வரதராஜாப்பெருமாள் ஆலய சூழலிலென பல இடங்களிலும் கையெழுத்து வேட்டை தொடரவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதே நாளை மறுதினம் வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் மக்கள் ஒப்பம் பெற ஏற்பாடாகியுள்ளது.
இதனிடையே தன்னார்வ பொது அமைப்புக்கள்,சனசமூக நிலையங்கள் ,விளையாட்டுக்கழகங்கள் மக்கள் ஆதரவை திரட்டும் பணியினில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு தேவையான தகவல்கள் மற்றும் படிவங்களை இல-16,மணல்தறை ஒழுங்கை,கந்தர்மடம்,திருநெல்வேலி(தொலைபேசி -0212212530) முகவரியினில் பெற்று மீள ஒப்படைக்கமுடியுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments