Latest News

September 15, 2015

போர்க்குற்றங்களுக்கு நீதி விசாரணையும், அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறையும் தேவை.-டக்ளஸ்
by admin - 0

கோர யுத்தத்தால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்த எமது மக்களுக்கு நீதி விசாரணை நடாத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்படுவதோடு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான பரிகாரமும் காணப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் உறுதியோடு குரல் கொடுத்து வருகின்றோம்.

இதேவேளை, சர்வதேச விசாரணையா? உள்ளக விசாரணையா? தேவை என்ற நிலைப்பாட்டில் எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி தடைப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்புடன் இருந்து வருகிறோம்.

அழிவுகளையும், இழப்புகளையும் சந்தித்த எமது மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு உரிய பரிகாரம் தேடப்படல் வேண்டும். நீண்ட கொடிய யுத்தத்தால் ஏற்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எமது மக்களின் இழப்பீடுகளுக்கும் பரிகாரம் தேடப்பட வேண்டும்.

அதற்காகவே, நீதி விசாரணையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். நாம் வலியுறுத்தும் நீதி விசாரணைக்கான கோரிக்கையின் ஊடாக எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்குத் தேவையான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதுமட்டுமன்றி, நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்கக் கூடியதுமான தீர்வினையும் காண முடியும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments