Latest News

August 27, 2015

கொழும்பில் வைத்து அழிக்கப்பட்ட புளொட் மோகன்..
by admin - 0





புளொட் மோகன் என்றால் மட்டக்களப்பு மக்களுக்கும், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் மறக்க முடியாத, அச்சத்துடன் பார்க்கப் பட்ட ஒரு பெயராகவே நிச்சயம் இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த புளொட் மோகன் 1985ம் ஆண்டு புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். புலிகள் புளொட் அமைப்பை தடை செய்த போது அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன், அவர்களின் பாதுகாப்புடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருந்தது. 
kavinthan

அந்த காலகட்டத்தில் கைது செய்தல், காணாமல் போதல், படுகொலைகள் எண்ணற்ற பாலியல் வல்லுறவுகள் மூலம் மட்டக்களப்பு மக்களை பயத்துடன் உச்சரிக்க வைத்த பெயரே புளொட் மோகன் ஆகும். பல போராளிகளின் சாவுக்கு முக்கிய காரணமாக இருந்தது புளொட் மோகன் குழுவே. சிங்கள உளவுத்துறையினருடன் சேர்ந்து இயங்கிய தமிழ் குழு உறுப்பினர்களின் முக்கியமானவர்களின் விபரங்கள் புலிகளின் உளவுத்துறையினரிடம் இருந்த போதும்,அவர்களை இனம் கண்டு தாக்குதல் மேற்கொள்ள நீண்ட காலம் பிடித்தது.

இது இப்படியே இருக்கும் போது இவர்களை இயக்கியது சிங்கள உளவுத்துறை தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமே. இதை எந்தக் காலத்திலும் சிங்கள அரசு, இவர்களால் மேற்கொள்ளப் படும் படுகொலைகள், ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவுகளுக்கும், தமக்கும் சம்பந்தம் இல்லை என்றே சர்வதேசத்தின் முன்னாள் சாதித்து வந்தது. 

இப்படி இருக்கும் போது தான் 2004ம் ஆண்டு சிங்கள உளவுத்துறையின் கீழ் இயங்கிய அத்துருகிரிய மிலேனியம் சிற்றி பாதுகாப்பு இல்லம் வெளியுலகிற்கு அம்பலமானது. இதையடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களது முழு விபரமும் எப்படியோ வெளிவந்தது. 

இந்தப் பட்டியல் புலிகளுக்கு கிடைத்து விடவே, புலிகளின் உளவுத்துறை போராளிகள் களமிறக்கப் பட்டனர். சிங்கள அரசின் இராணுவ புலனாய்வுப் பிரிவின், தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து புலிகளால் இலக்கு வைக்கப்பட்டனர். சிங்கள உளவுத்துறையினர் அதிர்ந்து போன நேரமது. புலிகளின் இலக்கில் இருந்து தப்புவதற்கு மிகவும் சிரமப் பட்டனர். 

ஒரு கட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவில் தமிழ் உளவாளிகளே இல்லாது போய்விடுவார்களோ என அஞ்சுமளவிற்கு தமிழ்க் குழு உறுப்பினர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகவே, இவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு இரகசிய திட்டமொன்றை வகுத்தது. அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசுக்குத் தெரியாமல் தங்கள் இரகசியத் திட்டத்தை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நிறைவேற்றினர். 

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்தியங்கும் தமிழ் உளவாளிகளுக்கு வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்து, விமானத்திற்கான பயணச் சீட்டையும் வழங்கி அவர்களில் பலரை, பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இதன் மூலம் பலர் தப்பி இருந்தனர். 

இந்த நேரத்தில் தான் கருணாவின் பிரிவு நடந்திருந்தமையால், இவர்களுக்கு பதிலாக கருணா குழுவை சிங்கள உளவுத்துறை பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. ஒரு கட்டத்தில் கருணா குழு மீதான தாக்குதல் ஊடாக பல முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டும், தப்பியோடியோ அல்லது புலிகளிடம் சரணடைந்தோ விட்டமையால் கருணாகுழு செயலிழந்து போனது. 

உடனே சிங்கள உளவுத்துறையினர் உயிர் பாதுகாப்பிற்காக அரபு நாட்டிற்கு அனுப்பப் பட்டிருந்த புளொட் மோகனை வரவழைத்து கருணாகுழுவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப் பட்டது. மீண்டும் புளொட் மோகனின் வருகையும், கருணா குழுவை வழிநடத்தியமையும் புலிகளுக்கு சினத்தை ஏற்படுத்தியது. அதனால் புளொட் மோகன் இலக்கு வைக்கப் பட்டான். அதற்கான பணியில் புலனாய்வு போராளிகள் களமிறக்கப் பட்டனர். 
புளொட் மோகனை இனம் காண்பதற்கு புகைப்படம் ஒன்றை எடுப்பதே முக்கிய பணியாக அன்று புலிகளுக்கு இருந்தது. காரணம் புளொட் மோகன் தன்னை புகைப்படம் எடுப்பதை விரும்புவதில்லை. அது ஏதோ ஒரு விதத்தில் புலிகளின் கையில் கிடைத்தால் தன்னை இலகுவில் இலக்கு வைத்து விடுவார்கள் என்பதே காரணம். புலிகளுக்கும் அதுவே மிகப் பெரும் சவாலாக இருந்தது.

முதல் கட்டமாக சிவா என்னும் பெயரில் மட்டக்களப்பில் இருந்த புளொட் மோகனின் குடும்பத்தாருடன்,புலிகளின் போராளி ஒருவர் உறவை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர்களுடன் ஆழமாக பழகிய போதும் மோகனின் புகைப்படம் ஒன்றை எடுக்க முடியவில்லை. அதனால் திட்டத்தை மாற்றி, புலிகளின் உளவாளியால் புளொட் மோகனின் சகோதரனுக்கு ஆசை வலை விரிக்கப் பட்டது. 
அதன்படி தான் ஒரு மதுபானசாலை போடவேண்டும் என்றும் அதற்கு மோகன் ஊடாக அனுமதிப் பத்திரம் பெற்று தருமாறு கோரப்பட்டு பெரும் தொகை ஒன்று கைமாறியது. அதனை தொடர்ந்து புளொட் மோகனை சந்திக்க புலிகளின் உளவாளி கொழும்பு பயணமானார். அதன் படி குறிப்பிட்ட திகதி ஒன்றில் கொழும்பில் உள்ள ""கவுஸ் ஒவ் பாஷன் (house of fashion" எதிரில் வைத்து முதல் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். 

அப்போது முச்சக்கர வாகனத்தில் (ஆட்டோ) எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாது வந்து இறங்கினான் மோகன். அவன் புலிகளின் உளவாளியை சந்தித்து உரையாடினான். அப்போது சந்தேகம் ஏற்படாது இவர்களது சந்திப்பை அவதானித்துக் கொண்டிருந்த புலிகளின் தாக்குதலாளிகள் புளொட் மோகனை இனம் கண்டனர். அன்று சத்தமில்லாது அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றபின் இது போல பல சந்திப்புகள் புலிகளின் உளவாளியால் மோகனுடன் ஏற்படுத்தப் பட்டது. 

தாக்குதலுக்கான நாளை தெரிவு செய்த புலிகள், தங்களது உளவாளி ஊடாக சந்திப்புக்கு நேரம் கேட்கப் பட்டது. அதன் படி 31 July 2004அன்று வழமையாக சந்திக்கும் "பேஷன் ஹவுஸ்" எதிரில் காத்திருக்கும் படி மோகனால் கூறப் பட்டது. அன்று மதியம் தான் செய்த பாவங்களுக்கான தீர்ப்பு நாள் என்பதை அறியாத புளொட் மோகன் உயர் பாதுகாப்பு பகுதியான நுகேகொடவில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது சந்திப்பிற்கு பயணமானான். 

அங்கு எந்தவித சந்தேகமும் இல்லாது புலிகளின் உளவாளியை சந்திக்க அவரிடம் சென்ற போது இவனுக்காக காத்திருந்த தாக்குதலாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதலை மேற்கொண்டபின், புளொட் மோகன் இறந்ததை உறுதிப் படுத்திய பின் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதுவரை தமிழரின் இரத்தத்தை குடித்துக் கொண்டிருந்த புளொட் மோகனின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. இராணுவ உளவுத்துறையில் கோப்பிரல் தரத்தில் இருந்த ஒரு இனத்துரோகி அன்று அழிக்கப் பட்டான்..!!
நினைவுகளுடன் துரோணர்..!!!
« PREV
NEXT »

No comments