கடந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா தேசியக் கொடிக்குப் பதிலாக வேறு கொடி பாவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யட்டிநுவர பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் இந்தக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
குருணாகல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் யட்டிநுவர பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர்
இந்தக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வருகை தருவதற்கு முன்னர் இந்த கொடி அகற்றப்பட்டது.
குறித்த கொடியின் காட்சியை வெளியிட வேண்டாம் என ஊடகவியலாளருக்கு, கூட்டத்தின் அமைப்பாளர்களினால்
அழுத்தம் விடுக்கப்பட்டதாக இன்று அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் எனினும் சிங்கக் கொடியை
முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த காலங்களில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments
Post a Comment