Latest News

July 04, 2015

யாழ்ப்பாணத்து மீன் ஒடியல் கூழ் குடிக்கலாம் வாங்கோ!
by admin - 0

யாழ்ப்பாணத்து மீன் ஒடியல் கூழ் குடிக்கலாம் வாங்கோ!

யாழ்ப்பாணத்துத் தமிழர்க்கும் தமிழக ஊர்ப்புறத்தாருக்கும் ஆடிமாதமெனில் கொதிக்கும் வெய்யிலில் இதமான கூழ் வடித்துக் குடிப்பது வழமை. இது மேலும் பனங்கட்டியும், தேங்காய்ச் சொட்டுடன் சேர்த்துச் சுவைப்பதும் பண்டைய கால மரபு.

■ தேவையானவை

● ஒடியல் மா 

● மீன் 
(வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)

● நண்டு (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)

● இறால் 

● சின்னச் சின்ன கணவாய்கள்.

● நெத்தலி மீன் கருவாடு 

● பயிற்றங்காய் (1 அங்குல நீள துண்டுகள்)

● பலாக்கொட்டைகள் (கோது நீக்கி பாதியாக வெட்டியது)

● ஒரு பிடி கீரை அல்லது கீரை வகைகள் 

● ஒரு பிடி அரிசி 

● பச்சை மிளகாய் இரண்டாக பிளந்தது

● செத்தல் மிளகாய் அரைத்தது

● பழப்புளி 

● உப்பு சுவைக்கேற்ப

■ செய்முறை

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும் 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். 

செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். 

பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) 

அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால், நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

■ கீழ்குறிப்பு

சைவ உணவு உண்போர் வெண்டைக்காய், பூசனி போன்ற காய்கறிகள் சேர்த்தும், மரவள்ளி, வாழைக்காய், பலாக் கொட்டை போன்றவற்றை பொரித்துச் சேர்த்தும் கூழைத் தயார் செய்யலாம்.
« PREV
NEXT »

No comments