தேர்தல்முறை மாற்றியமைக்கப்பட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தல் பழைய முறையின் படியே நடத்தப்படவேண்டுமென்றும் தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் அவசர தீர்மானத்தை எடுக்காது ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான இரு தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வருவதெனவும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
வெகுவிரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளு
க்கமைய தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவை எட்டுவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தினர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி,....... உள்ளிட்ட சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சுமார் ௩ மணி நேரத்திற்கும் அதிகமாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதான மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.
குறிப்பாக தேர்தல் முறைமைமாற்றம் தொடர்பில் உடனடித் தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென்று பிரதான கட்சிகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் உடனடித் தீர்மானமொன்றுக்கு வருவதில்லை எனவும், கொண்டுவரப்படும் தேர்தல்முறை மாற்றமானது நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படக்கூடாதெனவும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான இரு தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் சகல சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கலந்துரையாடி அதற்கமைய இணக்கப்படொன்றை எட்டுவதென்ற மூன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்
தற்பொழுது முன்வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறைமைமாற்றம் முக்கியமாக சகல சமூகத்திற்கிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதொன்று. இவ்வாறானதொரு திருத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது சாத்தியமற்றதாகவே கருதவேண்டியுள்ளது.
ஏனெனில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடொன்று எட்டப்படாத நிலையில் பெரிய கட்சிகளின் தேவைகளுக்காக நாம் செயற்படுவோமாயின் இறுதியில் இதன்தாக்கம் சிறுபான்மை மக்களையே சென்றடையும். இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதாயின் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திலும் இரண்டு பிரதான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் ஆராய்ந்துபார்க்காது எம்மால் உடனடித் தீர்மானத்தை எட்டமுடியாது. ஆகவே சிறுபான்மை, சிறிய கட்சிகளுக்கிடையில் இணக்கப்படொன்றை எட்டுவதன் மூலம் நமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவிக்கையில்
பாராளுமன்றத்தை கலைப்பதையும் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதையும் ஒன்றாக்கி தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் திட்டத்திலேயே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.
தேசிய அரசாங்கத்தின் மூலம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதென்பது பொதுவான இணக்கப்பாடு. அந்த வகையில் அதிகாரப்பகிர்வினை செய்துவிட்டோம். ஆயினும் தேர்தல்முறைமை மாற்றம் என்பது தேசிய அரசாங்கத்துடன் தொடர்புபடாததும் அனைத்துக் கட்சிகளுக்கிடையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துமோர் திருத்தமாகும். ஆகவே தேர்தல்முறைமை மாற்றம் தொடர்பில் கொண்டுவரப்படும் மாற்றத்தினை ஆராயாது ஆதரவளிக்கமுடியாது. அதேபோல் பாராளுமன்றம் இன்று பலமற்றதொரு நிலையிலேயே செயற்படுகின்றது. ஆளும், எதிர்க்கட்சிகள் யார் என்பது தெரியவில்லை. அத்தோடு மக்களின் ஆதரவில்லாத ஒருவர் இன்று அரசாங்கத்தை நடத்துகின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் நிலையான பாராளுமன்றத்தினை அமைப்பதோடு உறுதியான அரசாங்கத்தினையும் பலமான எதிர்க்கட்சியினையும் உருவாக்கவேண்டும். அதன் பின்னரே தேர்தல் முறைமையில் மாற்றம் தொடர்பில் சிந்திக்க முடியும் . மேலும் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவேண்டுமென்ற கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம். எனினும் இன்னும் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அதன் பின்னர் நடத்தப்படவேண்டிய தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலஅவசகாசம் தேவை.
அவசரமாக தேர்தல்முறைமையில் மாற்றத்தினைக்கொண்டுவந்து உடனடியாக தேர்தலை நடத்துவது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே தேர்தல்முறைமையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் இம்முறை நடைபெறும் தேர்தல் தற்போது இருக்கும் முறையிலேயே நடத்தப்பட வேண்டும்.
மேலும் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் பிரதான இரு திருத்தங்கள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்தி அத்திருத்தங்களில் எது சிறந்தது என்பதில் இனங்காண்பதோடு சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்குகிடையில் நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றங்களைக் கொண்டுவந்து அதற்கமைய இணக்கப்பாடொன்றை எட்டப்படவேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த தமிழ், சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் இவ்விடயங்கள் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதோடு எதிர்வரும் காலங்களில் இவ்விடயங்கள் தொடர்பில் கூடிய கவனமெடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
No comments
Post a Comment