Latest News

May 01, 2015

ஜனாதிபதி பிரேமதாசவும், தற்கொலை குண்டு தாரியும்..!!
by admin - 0

ஜனாதிபதி பிரேமதாசவும், தற்கொலை குண்டு தாரியும்..!!


இதே நாளில் சிங்கள தலைநகரில் வார விடுமுறை நாளான ஒரு சனிக்கிழமை வழமையை விட உற்சாகமாகவே விடிந்திருந்தது. 01/05/1993 அன்றைய தினம் தான் சிங்கள தேசத்தில் பெரும் இடி விழுந்த நாள்.! தொழிலாளர் தினமான அன்று UNP கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தமது தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க தலை நகரை நோக்கி வாகனங்களில் அணிவகுத்து தமது மக்கள் பலத்தை காட்ட சிங்கள தலை நகரை நிறைத்திருந்தனர். நடக்க போகும் விபரீதம் புரியாமல் குதுகலத்தில் இருந்தனர்.

மறுபக்கத்தில் இந்த விதியை எழுதிய வீரன் 1990இன் இறுதிப் பகுதியில் சிங்கள தலைநகருக்கு குடியேறியிருகின்றான். அங்கு வந்து சில நாளிலேயே சிறிய விடுதி (hotel) ஒன்றில் தெரிந்த ஒருவர் மூலம் வேலையில் இணைந்திருந்தான். இணைந்து சிறிது காலத்திலேயே விடுதி அதிபரின் அன்பை பெற்றதினால் வீடு இல்லாது சிரமப்பட்ட அவனை தன் வீட்டிலேயே கொண்டு சென்று தங்க வைத்தார். 

பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அந்த விடுதி அதிபரின் வீட்டில் இருந்து சிறிது தூரத்திலேயே பிரேமதாசாவின் வீடும், கொழும்பு நகரில் `சுசரிதா’ என்ற பகுதியில் இருந்ததால் அவன் வந்த வேலைக்கு வசதியாக இருந்தது. அவனது வீடும், வேலை செய்யும் விடுதியும் அருகருகில் இருந்தமையால் தனது போக்குவரத்துக்கு வசதியாக புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கி இருந்தான். 

அந்த நேரத்தில் சிங்கள இளவயதினர் சைக்கிளின் மக்காட் (fenders), செயின் கவர் போன்றவற்றை கழட்டி அதற்கு ஒடுங்கிய சீட் ஒன்றையும் பொருத்தி ரேசிங் சைக்கிளாக மாற்றி தான் ஓட்டுவார்கள். அதே போலவே இவனும் அந்த சைக்கிளை மாற்றி ஒட்டி வந்தான். எங்கு சென்றாலும் அதிலேயே சென்று வருவான். சைக்கிளில் திரிவதால் சிங்கள பாதுகாப்பு படையினரின் "துருவல் விசாரணைகளில்" சிக்குவதில்லை.

அந்த நேரத்தில் சிங்கள அதிபருக்கு அவரை சுற்றி ஒரு வளைய பாதுகாப்பே இருந்தது. (பிரேமதாசா மீதான தாக்குதலின் பின் பதவி வகித்த அதிபர்களுக்கு மூன்று வளைய பாதுகாப்பு போடப்பட்டது) அதன் பாதுகாப்பு அதிகாரியாக மேஜர். முகைதீன் என்பவர் இருந்தார். இவர் பிரேமதாசாவின் நம்பிக்கையை பெற்ற அதிகாரியாவார். 

இந்த அதிகாரி தனது ஓய்வு நேரத்தில் மேலே குறிப்பிட்ட விடுதிக்கே மது அருந்த செல்வது வழமை. அத்தோடு பெண் சபலமுள்ள அந்த அதிகாரி அடிக்கடி பெண்களுடன் வந்து தங்கி செல்வார். இதன் மூலம் அந்த வீரனுக்கு அந்த அதிகாரியுடன் அறிமுகம் ஏற்பட்டு, அது நல்ல நட்பாக மாறி விட்டிருந்தது.

இலங்கையில் 1988ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும், புலிகளுடன் இந்திய படைகள் கடுமையாக மோதிய காலம் என்பதால், முகாம்களில் வேடிக்கை பாத்துக் கொண்டிருந்த சிங்கள படைகளைக் கொண்டு, அப்போது தென்பகுதியில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிங்கள அமைப்பான JVP யை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். 

அந்த நேரத்தில் தனது நம்பிக்கைக்குரிய இராணுவத்தை கொண்டு "கொல கொட்டி" (பச்சைப் புலிகள்) என்னும் கொலைப் படையை உருவாக்கி JVP யுடன் சம்பந்தப் பட்ட அனைவரையும் (அவர்களது குடும்பம் உட்பட) கடத்தி சித்ரவதை செய்து படுகொலை செய்தபின் களனி ஆற்றில் வீசினர். பலர் வீதியோரங்களில் சுட்டு கொல்லப் பட்டபின்பு கொளுத்தி விடப் பட்டனர். அந்த நேரத்தில் பிணங்களால் கொழும்பி நிறைந்தது. இதன் போது அந்த அமைப்பின் தலைவரான ரோகன விஜயவீர உட்பட பல ஆயிரம் பேர் கொல்லப் பட்டு சிங்களவர்களின் ஆயுத போராட்டம் நசுக்கப் பட்டது. 

இதை செய்து முடித்த கொல கொட்டியின் கட்டளை அதிகாரியாக இந்த மேஜர். முகைதீனே இருந்தார். தனது சொந்த மக்களையே வகை தொகையாக கொன்று சிங்களவர்களின் கிளச்சியை அடக்கிய பின்தான் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்னும் மாயவலை விரித்து இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்பிய பின் புலிகளை அழிக்க திட்டம் தீட்டி செயல் படுத்தினார்.

இந்த நேரத்தில் அந்த வீரனிற்கும், முகைதீனுக்குமான நட்பு மிகவும் உறுதியாகி அவனது தனிப்பட்ட வாகனத்தில் ஒன்றாக திரியுமளவுக்கு அவனது நம்பிக்கையை பெற்றிருந்தான் அந்த வீரன். இந்த நேரத்தில் மேதின கொண்டாட்டத்திற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. சிங்கள மக்களின் ஆவலை நிறைவு செய்யும் நாளும் வந்து, அன்றைய பொழுதும் விடிந்தது.

அன்றைய நேரத்தில் சில காரணங்களுக்காக இந்த இலக்கை அகற்றும் முடிவை இந்த குழுவை சேர்ந்தவர்களின் அதிகாரி எடுத்து, அதற்கான "தகுதியான ஒருவரை" உடனே அனுப்பி வைக்க முடியாமையினால், இவனையே அதை செய்ய முடியுமா என்று கேட்கப் படுகின்றது. "அதற்குரிய ஆள்" இவன் இல்லை என்ற போதும் எந்த வித சலனமோ, தயக்கமோ இல்லாது அந்த காரியத்தை செய்ய சம்மத்தித்து அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டான்.

மூன்று வருடங்கள் மது, மாது என்ற ஆடம்பர வாழ்கையின் மையத்தில் சுழன்ற போதும் அவனை அது பாத்திக்கவுமில்லை, சலனப்படுத்தவுமில்லை. ஒரு கர்மவீரனாகவே நிச்சயம் இருந்திருப்பான். அன்றைய நாளும் வந்தது.! காலை எழும்பியதும் என்ன நினைத்திருப்பான்?? யாரைப்பற்றி நினைத்திருப்பான்?? 

குண்டைப் பொருத்த உதவிய அவனது அதிகாரியான நண்பனை கட்டி அனைத்தபின் தனது விருப்பமான ரேசிங் சைக்கிளில் இலக்கை நோக்கிப் போக ஆயத்தமானான். அந்த கருப்பு ஜீன்சும் நீல சேட்டும் அவனுக்கு எடுப்பாகவே இருந்திருக்கும். அவன் கூடவே பயணித்த நண்பன் குறிப்பிட்ட தூரத்தில் வைத்து விடை பெறுகின்றான். அவனும் புன்னகையுடன் கையசைத்து விடை பெறுகின்றான்.! 

இந்த ஊர்வலத்துக்கு பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு “ஜீப்”பில் மக்களுக்கு கையசைத்த வண்ணம் . நகரின் மையப்பகுதியான ஆர்மர் வீதியில் வந்து கொண்டிருந்த போது பகல் 12.45 மணி அளவில் ஊர்வலம் போய்க்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த அந்த வீரனை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியபோது இவனை கண்ட மேஜர்.முகைதீன் அவனை தடுக்க வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டு அவனை தன்னிடம் வருமாறு அழைத்தான். அவனும் முகைதீனை நெருங்கிய போது கைதொடும் தூரத்தில் இலக்கு இருந்தது. 

தாக்கும் வீச்சு எல்லைக்குள் வந்ததும் தன்னிடம் இருந்த குண்டை வெடிக்க வைத்தான் அந்த வீரன். குண்டு வெடிப்பில் சிக்கி பிரேமதாசா உடல் சின்னாபின்னமாகி மரணம் அடைந்தார். குண்டை வெடிக்கச் செய்த மர்ம வீரனும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் சிதைந்து போயிருந்தான். 

குண்டு வெடிப்பில் பிரேமதாசாவின் பாதுகாவலர்கள் ஆறு பேரில் முகைதீன் உட்பட மேலும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து 40 பேர் பலியானார்கள். இவர்களில் 16 பேர் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதறிப்போய்விட்டன. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.

அடுத்த நாள் அந்த வீரனின் தலையை வைத்து அவனது பெயர் பாபு என்றும் (இது உண்மையான பெயர் அல்ல என்ற கருத்தும் சிங்கள உளவுத் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். அனால் இந்த பெயரில் தான் (பாபு) அந்த வீரன் அங்கு அறியப்பட்டான்) அவனது கழுத்தில் சையனைட் வில்லை ஒன்றும் வெள்ளி சங்கிலியில் கோத்து இருந்ததுக்கான அடையாளங்களை வைத்து சிங்கள உளவுத்துறையினர் புலிகள் மீது பழியை போட்டனர். அனால் சிங்கள மக்களையும் வகை தொகையாக கொன்றமையால் இது அவர்களாலும் செய்யப் பட்டிருக்கலாம் என்னும் கருத்தும் கொண்டு வரப்பட்டிருந்தது. 

எது எப்படியோ இரு இனத்துக்குமான எதிரி அன்று உடல் சிதறி பலியானான். நிச்சயமாக அந்த மக்கள் இந்த நாளை கொண்டாடி இருப்பார்கள். அந்த வீரனின் நண்பர்கள் வெளித் தெரியாது மெளனமாக அழுதிருப்பார்கள் என்பதும் நிச்சயமே..!!

- ஈழத்து துரோணர்
« PREV
NEXT »

No comments