புதிய தலைமுறை சென்னை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர்.
2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது சமூக விரோதிகள் சிலர் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Social Buttons