Latest News

March 08, 2015

ஆட்சி மாறியும் தமிழர்கள் மீதான கெடுபிடிகள் கைதுகள் அச்சுறுத்தல்கள் குறையவில்லை- பா.அரியநேத்திரன்
by Unknown - 0

ஆட்சி மாறியபோதும் தமிழ்மக்களுக்கான கெடுபிடிகள் கைதுகள் அச்சுறுத்தல்கள் இன்னும் குறையவில்லை இதை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய ஐனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவியேற்றபின் வடகிழக்கு தமிழ்மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என எதிர்பார்த்த போதும் அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காகவும்,புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் சுதந்திரமாக கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக பயணிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றவர்களும் ஐரோப்பியநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் கடந்ந மகிந்த அரசுபோல் மைத்திரி அரசாலும் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டு 4ம் மாடியிலும் ஏனைய சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் மத்தியகிழக்கு நாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்று விடுமுறையில் நாடுதிரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும,யாழ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுமாக ஏறக்குறைய ஒன்பது இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தமது உறவினர்களை கிளிநொச்சியில் பார்வையிட்டு செல்லும்போது 41வயதான முருகேசு பகிரதி எனும் தாயும் அவரின் 8 வயதுடைய சிறுமியும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மீண்டும் பிரான்ஸ் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கு இலங்கை அரசு கூறும் காரணம் அந்த தாயார் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கடற்படையில் இருந்ததாகவும் அதற்காக விசாரிப்பதற்காகவும் கைது செய்ததாக கூறுகின்றனர், உண்மையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டபின் தமக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கையில் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களை திட்டமிட்டு அவசரகாலசட்டத்தை வைத்துக்கொண்டு கைதுசெய்வதானது கண்டிக்கதக்க விடயமாகும்.

தொடர்ந்தும் நாட்டில் அவசரகாலச்சட்டத்தை வைத்துக்கொண்டு நல்லாட்சியைப்பற்றியும், இணக்க அரசியல் பற்றியும்,தேசிய ஆட்சியைப்பற்றியும், கூட்டாச்சியைப்பற்றியும், பேசுவது முழு உலகத்தையே ஏமாற்றும் செயலாகும். இதைவிட வவுனியாவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் இப்படியான சம்பவங்களை பார்க்கும்போது தொடர்ந்தும் அவசரகாலசட்டத்தை வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்துக்கு காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல் ஹுசெய்ன் அவர்கள் கடந்த 28வது அமர்வில் உரையாற்றும்போது இலங்கை அரசு கடந்த காலங்களில் விட்ட தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால் இலங்கை அரசு அரசுத்தலைவர் மாறினாலும் தமிழ்மக்கள்மீதான அடக்குமுறைகள் மாறவில்லை என்பதை இந்தசம்பவங்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.

எனவே புலம்பெயர் எமது சமூகம் எப்படி இலங்கைக்கு வருகைதந்து முதலீடுகள் செய்யமுடியும். இதை சர்வதேச நாட்டின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் புரிந்துகொண்டு இலங்கை அரசுக்கு இவ்வாறான நிலைமைகள் தமிழர்களுக்கு ஏற்படாவண்ணம் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் கேட்டுள்ளார்.
« PREV
NEXT »