இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்டப் போரை நடாத்த இந்தியா உதவியது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் கடந்த 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது.
இந்திய உதவி இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ச அறிவித்தார். ஆனால், அதனை முன்னாள் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.
போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஒருவேளை இந்திய அரசியல்வாதிகளுக்கு அம்னீசியா (மறதி நோய்) ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், இந்தியா உதவியது என்பதே உண்மை. அத்துடன் இலங்கைப் போரில் மனித உரிமை மீறப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். 1970 காலகட்டத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.விக்னேஸ்வரன், பொறுப்பற்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படையும் காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு இலங்கையை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Social Buttons