புதிய ஜனாதிபதியின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினரும் பொதுநிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளருமான பி.பீ அபயக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இதே வேளை இராணுவ, கடற்படை தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளனர் ,
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிரகாரம் தற்போதய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் அப்பதவிகளில் தொடர்வதை புதிய அரசுத் தலைமை விரும்பவில்லை என்றும், அப்பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் செல்வதற்கு அவர்களும் முன்வந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் பதவிகளை விட்டு விலகியதும் அவர்களது இடங்களுக்கு புதியவர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19ம் திகதி ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன் பின்னர் தமது நம்பிக்கையான மூத்த விமானப்படை அதிகாரி ஒருவரை அப்பதவிக்கு புதிய ஜனாதிபதி நியமிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஓய்வுக்குரிய காலம் கடந்த பின்னரும் இரண்டு தடவைகள் பதவி நீடிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவை பதவி விலகிச் செல்லுமாறு புதிய அரசுத் தலைமை கோரியிருக்கிறது என்றும் தெரிகிறது.
எனினும் பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்கக்கோன் அப்பதவியில் தொடர்வதை புதிய ஜனாதிபதி விரும்புகிறார் என்றும் கூறப்பட்டது.
Social Buttons