Latest News

August 10, 2014

வருடாந்தம் 80000 இளையோர் மனநலப்பாதிப்புக்களால் தற்கொலைக்கு முயற்சி!
by Unknown - 0

இளம்பராயத்தினர் எதிர்கொள்ளும் அதிகரித்த மனஅழுத்தம் உள்ளிட்ட மனநலப்பாதிப்புக்கள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 80,000 இளையோர் தற்கொலைசெய்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எலன் சிப்னேலர் தெரிவித்தார்.
 
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளஞ்சந்ததியினர் எதிர்கொள்ளும் மனநலப்பாதிப்புக்கள் தொடர்பில் அண்மையில் சுகாதாரக்கல்விப்பணியகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
இளம்பராயம் என்பது உண்மையிலேயே சவால்கள் நிறைந்த ஒருகாலகட்டமாகும். இக்காலகட்டத்தில் தான் உடல், உள, சமூக ரீதியில் இளஞ்சந்ததியினர் பக்குவத்தையும் வளர்ச்சியையும் அடையவேண்டிய தேவைப்பாடும் காணப்படுகின்றது. அவ்வாறு பார்க்கின்ற போது பாலியல் ரீதியான வன்முறைகள், மதுபாவனை உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடுகின்றது. இலங்கையைப்பொறுத்த மட்டில் 2, 00000 பேர் தீவிர மனநலப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.
 
மனஅழுத்தம் உள்ளிட்ட மனநல சுகாதாரத்தைப் பாதிக்கும் காரணிகளால் 40 வீதமான மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதாக ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவியரீதியில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட 280 மில்லியன் இளையோர் மனநலப்பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
 
இவ்வருடத்தின் கடந்த ஏழுமாதக்காலப்பகுதியில் 18 வயதான 14 மில்லியன் இளம்யுவதிகள் கட்டாயத்திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை 15 வயதான 2 மில்லியன் இளம்யுவதிகள் குழந்தைப்பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இவை இளம்பராயத்தினரின் எதிர்காலத்தை சீர்குலைப்பதாகவே அமைகின்றன. இன்றைய சமூகத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களைக்கூட பிறர் மத்தியில் பெருமிதத்துடன் கூறுவோர் உள்ளனர் என்றார்.
« PREV
NEXT »