இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வந்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் அனுசரணையுடன் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பில் இலங்கை நடவடிக்கை மேற்கொண்டமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்திய அழுத்தத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்னிந்தியாவில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல்களின் அடிப்படையிலும், இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற காரணத்தின் அடிப்படையிலும் இந்தியா இந்த அழுத்தத்தை வழங்கியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்தில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் பணி முடிவடைந்தும் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பவர் என்ற அடிப்படையில் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் வெளியறவு அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரும் அரசியல்நிலை கலந்துரையாடல்களுக்காக தமது நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons