Latest News

July 01, 2014

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவு, கண்டுபிடிப்புக்களுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்!
by Unknown - 0

போர்க்காலத்தில் தொழில்நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர் யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம் அழித்து விட்டுள்ளோம். அவை தொழிற்திறனும், தொழில் வல்லமையும், பொறுமையும் சேர்ந்து உருவாக்கிய இந்த இயல்பியல் அதிசயங்கள் என விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவையும், கண்டுபிடிப்புக்களையும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புழந்துள்ளார்.

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் காலை இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு தொழில் நுட்பப் பீட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்கள் கல்லூரி 1834ல் ஆங்கிலேய மெதடிஸ்ட் சமயப் பரப்பாளர்களால் தொடங்கப்பட்டது. இவ் வருடம் 180 வருடங்கள் ப+ர்த்தியாகின்றது என்று நினைக்கின்றேன். எனினும் வேம்படி உயர்தரப் பாடசாலை என்ற பெயர் 1897இலேயே வந்தது என்று அறிகிறேன்.
என் தாயார் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இங்கு மாணவியாக இருந்தார். நான் படித்த றோயல் கல்லூரி கூட 1835ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்லூரிகள் யாவும் எவ்வளவு காலமாக எம் மாணவ மாணவியர்க்கு நற் கல்வியைப் போதித்து வருகின்றன என்பது இதிலிருந்து தெரிகின்றது. 1944ல் உங்கள் கல்லூரிக்கு இலவசக்கல்வி அளிக்க வழிவகுக்கப்பட்டது.
1960ல் அரசாங்கம் கையேற்றது. 1984ல் தேசியக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இன்று உங்கள் கல்லூரிபல விதங்களிலும் முன்னணியில் இருந்து வருவதை நான் அறிவேன். சிரேஷ்ட பிரிவுக்கான ஆங்கில விவாதப் போட்டியில் இவ் வருடம் உங்கள் கல்லூரி முதலிடத்தையும், கனிஷ்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றதை இதற்காதாராமாகக் கூறலாம்.
அத்துடன் தமிழ்மொழிப் பாடசாலைகளில் 2013க்கான G.C.E சாதாரண தரப் பரீட்சையில் முதலாம் இடத்தையும், சிங்கள, தமிழ்மொழிப் பாடசாலைகளுள் 5வது இடத்தையும் உங்கள் கல்லூரி பெற்றுள்ளதையும் அவதானிக்கின்றேன். மேலும் மேலும் உங்கள் கல்லூரி உயர்நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
கல்விப் பொதுத் தராதரம் உயர்மட்ட நிலையில் தொழில்நுட்பம் ஒரு பாடமாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கல்லூரிகளில் செவ்வனே பயிற்றுவிக்க ஏதுவாகவே தொழில்நுட்ப பீடங்கள் நிறுவப்பட்டன.
Mechanical Engineering Technology,   Civil  Engineering Technology,  Power  and Electrical  Technology,  Bio  System Technology   போன்ற தொழில் நுட்பப் பாடங்களைக் கற்பிக்கவும் அதற்கான மாணவ அறைக் கட்டிடங்களையும், உரிய கருவிகளையும் மற்றும் வகுப்பறை அனுசரணைகளையும் வழங்குவதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள்.
2013 தொடக்கம் தேசிய மட்டத்தில் 250 பாடசாலைகளில் உயர்தர மட்ட தொழில்நுட்ப ஒழுந்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த 250னுள் உங்கள் கல்லூரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மாணவ மாணவியர் வருங்காலத்தில் மிக முக்கிய ஒரு பங்கை வகிக்க இருக்கின்றார்கள் என்பதை மாணவிகளான நீங்கள் மறந்து விடக்கூடாது. தொழில்நுட்பக் கல்வியானது சகல தொழில்கள் பற்றியும் அல்லது குறிப்பிட்ட தொழில்கள் பற்றிய வழிமுறைகளை, அவை சார்ந்த கல்வியைப் பெறுவதாகும்.
எமக்கு வெளியில் இருக்கும் இந்த உலகத்தை மாற்றி அமைக்கக் கிடைக்கும் பொருட்களை வைத்து, கருவிகளை வைத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இவ்வாறான கல்வி எமக்கு உதவியளிக்கின்றது. மேற்கத்தைய நாடுகள் இதுவரையில் இதையே செய்து வந்துள்ளன.
பாரிய தெருக்கள், கட்டிடங்கள், இரயில்கள், ஆகாயவிமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் என்று பலவாறாகத் தொழில்நுட்ப அதிசயங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.
அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள் கூட பொருளாதார விருத்தியிலும், தொழில்நுட்ப விருத்தியிலுமேயே அடக்கம் பெற்றன. அறநெறிகள், சமய நோக்குகள், ஆத்மீக மேம்பாடு போன்றவை அவர்கள் உலகாயத வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை, அவசியமில்லை என்று நினைத்து இயல்பியல் உலகையே கதி என்று வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால் வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன. வருங்காலம் எத்தகையதாக அமையும் என்பதைக் கூறமுடியாது.
அதனால் நாங்கள் எமது மதரீதியான, அறரீதியான, மனிதாபிமான ரீதியான பின்னணியைப் பேணிக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறுவதே உசிதம் என்று நினைக்கின்றேன்.
போர்க் காலத்தில் தொழில் நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர் யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம்அழித்து விட்டுள்ளோம். அத்தனை தொழிற்திறனும், தொழில் வல்லமையும், பொறுமையும் சேர்ந்து உருவாக்கிய இந்த இயல்பியல் அதிசயங்கள் கண்காணாமற் போயுள்ளன.
இதைத்தான் நான் இங்கு கூற வருகின்றேன். அதாவது மனிதனின் ஆற்றலானது ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும் செயற்படுவதாலேயே இவையெல்லாம் நடக்கின்றன.
ஆகவே எமது அறநெறியில் ஸ்திரமாக இருந்து கொண்டு ஆன்மீக அறிவுரைகளில் திளைத்துக் கொண்டு அதே நேரம் தொழிற்துறைகளில், தொழில்நுட்பங்களில் மேம்பாட்டைக் காணுவோமாக என்று கூறிக் கொண்டு என்னை இன்று இங்கு அழைத்த கல்லூரி அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
« PREV
NEXT »