Latest News

June 25, 2014

இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க UN வியூகம்
by admin - 0

இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்து வருகின்றது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது அரசுக்கு கவலையளிக்கின்றது என்று சிரேஷ்ட அமைச்சர்களுள் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஐ.நாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ முறையிடுவதன் மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, உள்நாட்டுத் திட்டங்கள் மீது கூட்டமைப்பு நம்பிக்கை வைக்கவேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணைக்குழுவின் நோக்கம் என்னவென்று எமக்குத் தெரியும். திட்டமிட்டதொரு நிகழ்ச்சிநிரலை இலங்கை மீது திணிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அத்துடன், குறுகிய காலத்துக்குள் ஐ.நா. விசாரணைக் குழுவால் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்க முடியாது. விசாரணையாளர்கள் பக்கச்சார்பற்ற வர்கள் என நாம் எவ்வாறு நம்புவது? இவற்றைக் கருத்திற்கொண்டே நாடாளுமன்றத்தினூடாக மக்களின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கட்டியயழுப்புவதே மனித உரிமைகள் சபையின் நோக்கமாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் இல்லாதபோதிலும் உலகின் ஆதரவைத் திரட்டி பாதுகாப்புச்சபையின் ஊடாக அதை செய்வதற்குரிய நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா. குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்படுவது கவலையளிக்கின்றது. உள்நாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே பேசித் தீர்க்கும் வழிமுறைகள் இருக்கையில் கூட்டமைப்பு ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும்? என்று மேலும் தெரிவித்தார் அவர்.
« PREV
NEXT »