தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேசுவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூறுகின்றது இலங்கை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின் போது தலைமை தாங்கியவரும், கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற அரசதரப்புக் குழுவுக்கு தலைமை தாங்கியவருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தலையிட்டது. அதற்கமைய தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கை விடயங்களை கையாள்வதற்காக சிறப்புப் பிரதிநிதியாக சிறில் ரமபோவை நியமித்திருந்தார்.
சிறில் ரமபோவின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரச தரப்பினர் சென்றிருந்தனர். அதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த வாரம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றனர். தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்க அனுசரணையில் இலங்கை அரசுடனான பேச்சுக்குத் தயார் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். எனினும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
Social Buttons