சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று விடுதலை புலி உறுப்பினர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் என்று கூறப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேரும் நெடுங்கேணி காட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழீழ விடுதலை உறுப்பினர்களுக்கும் உடந்தையாக இருந்தாகவும், இவர்கள் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் சந்தித்து இயக்கத்தை புதுப்பிக்க முயற்சி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கோபி என்ற நபர் பயன்படுத்திய தொலைபேசியை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியதையடுத்து, அதில் இருந்த விவரங்கள் எம்.பி. மற்றும் பயங்கரவாதத்திற்கு இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தேசிய ஹீரோவாக பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி பாராட்டிப் பேசியதை நினைவு கூர்த்தார்.
இதேவேளை, எம்.பி. மற்றும் பலருடன் கோபி வைத்திருந்த தொடர்புகளை நிரூபிக்க ஆதாரம் இருப்பதாகவும், அவர்களது பெயர்கள் விரைவில் வெளிவிடப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Social Buttons