Latest News

April 28, 2014

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்
by admin - 0

இலங்கை அரசியல் சட்டத்திலிருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சமர்ப்பித்த தனிநபர் அவசர பிரேரணையே திங்கட்கிழமை(28) நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்றே அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பிரேரணைக்கும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி யினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று (28.04.2014) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 03 வருடங்களுக்கு என்று மட்டும் கொண்டு வரப்பட்ட குறித்த பயங்கரவாத தற்காலிக ஏற்பாட்டுச்சட்டம் அதனை தொடர்ந்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் 1982 ஆம் 1988 ஆம் ஆண்டுகளில் நிரந்தரச்சட்டமாக்கப்பட்டது.

தமிழ் மக்களை மட்டும் இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட குறித்த சட்டம், முன்னறிவித்தல் இன்றி எவரையும் எவ்விடத்திலும், தம் விருப்புக்கு ஏற்ப பொய் குற்றம் சுமத்தி கைதுசெய்யலாம் எனும் அவசர கைதுகளுக்கும், பிணையில் எடுக்க முடியாத தடுப்பு காவலுக்கும், நீண்ட நேர சித்திரவதைகளுடன் வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கும், பொதுவில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத அந்த குற்ற ஒப்புதல் பத்திரத்தை கொண்டு வழக்குத்தாக்கல் செய்வதற்கும், தாம் விரும்பாத ஊடகத்தை தடை செய்வதற்கும் வழி வகை செய்கின்றது.

1966 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டு ஒப்பந்தம், சட்ட விரோத கைதுகள், பாரபட்சமான இன மத பாகுபாடுகளுடனான விசாரணைகள், மனித சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ஐநா சபையின் சரத்துகளுக்கு முரணான குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்யுமாறு அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டது.

இதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரையும் ஆதரவளிக்குமாறும் கோரப்பட்டது.
« PREV
NEXT »