Latest News

January 07, 2014

தந்தையின் பாசத்திற்கு ஏங்கிய பதினாறு வயது சிறுவன் பரிதாப மரணம் - நல்ல உள்ளங்கள் தொடர்புகொண்டு உங்களது உதவிகளைச் செய்யுங்கள்
by admin - 0

நல்ல உள்ளம் படைத்த உறவுகள் அவர்களின் குடும்பத்திற்கு .இயலுமான உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் 0094778566838 என்ற தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு உங்களது உதவிகளைச் செய்யுங்கள் என்றும் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இல.1108, திருநகர் தெற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த திரு.வீரலிங்கம் மற்றும் திருமதி சிவாஜினி வீரலிங்கம் ஆகியோரின் மகன் வீ.நிதர்சன் கடந்த 05.01.2014 ஞாயிறன்று திடீரென மயங்கி விழுந்து மரணமுற்றுள்ளார்.

குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளையும் குடும்பத்தின் மூத்தவருமான இவர் தனது பதினாறு வயதிலியே குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இவரது சகோதரிகளான நிதுர்சிகா (15வயது), யதுர்வினா (13வயது) மற்றும் கதுர்சிகா (6வயது) ஆகியோரின் படிப்புச் செலவு உட்பட தாயையும் குடும்பத்தையும் ஓரளவிற்குப் பட்டினியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக இவர் தனது படிப்பைத் தியாகம் செய்து தினக்கூலி வேலைசெய்து வந்தார். 

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் இவரது தந்தை வீரலிங்கம் கைது செய்யப்பட்டு எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார். தந்தையின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த இவர், தனது மனவேதனையை தனக்குள்ளேயே அடக்கிவைத்து குடும்பப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு வந்துள்ளார். 


தனது உழைப்பில் கிட்டும் வருமானம் சாப்பாட்டுச் செலவிற்கே போதாமையால் தங்கைகளின் படிப்பிற்கு என்ன செய்வதென்று அவர் மனதிற்குள்ளேயே தினமும் அழுதிருக்கின்றார். தந்தையின் பிரிவால் ஏற்பட்ட சோகம் ஒருபுறமும், நாள்தோறும் பெருகிவருகின்ற வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட இயலாமை ஒருபுறமுமாக நிதர்சனை வாட்டி வதைத்துள்ளது. 

இறுதியில் வீரலிங்கம் தம்பதியினர் தனது மகனையும் அவரது சகோதரிகள் தமது அன்புச் சகோதரனையும் இழந்து தவிக்கின்றனர். அந்தக் குடும்பம் மட்டுமன்றி திருநகர் தெற்கே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றது. 

விடயம் கேள்விப்பட்டவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் திரு.இந்திரராசா மற்றும் பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கட்சியின் இலண்டன் பிரதிநிதி இராஜேஸ்வரன் (பரமேஸ்), கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் வேழமாலிகிதன் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு தங்களது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர். 


மகனின் இறுதிக் கிரியையில் சிறையிலுள்ள கணவரை அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மனைவி

கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிக் கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு சிவாஜினி வீரலிங்கம் என்ற பெண் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். 

நல்ல உள்ளம் படைத்த உறவுகள் அவர்களின் குடும்பத்திற்கு .இயலுமான உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் 0094778566838 என்ற தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு உங்களது உதவிகளைச் செய்யுங்கள் என்றும் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments