Latest News

January 27, 2014

இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண்!!
by Unknown - 0

இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண்
– நம்மவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா





2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.

நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்ள தகவல் கிடைத்தவுடன் குருவி டீம் பியர்சன் விமான நிலையம் விரைந்தது. இது தொடர்பில் பெண்மணியிடம் பேசிய போது 2008 இல் தனது அகதியாக கனடா வந்ததாகவும்,, அகதி கோரிக்கை மனு தொடர்பான வழக்கு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதால் தான் தற்போது திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இரு பெண் குழந்தைகளில் ஒருவர் பெண்மணி இந்தியாவில் இருந்த சமயத்திலும் , இளைய குழந்தை கனடா வந்த பின்னரும் பிறந்துள்ளது. குழந்தைகளுக்கும் , பெண்மணியின் கணவருக்கும் கனடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.



தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்து நின்ற கொடுமையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

அகதி கோரிக்கை நிராகரிக்கபப்ட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும் , பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் , பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

போதிய விழிப்புணர்வின்றி மெத்தனமாக இறுதி நேரம் வரை இருந்து விட்டதால் இது தொடர்பில் பிறர் பொதுவான முயற்சிகள் எடுப்பதும் கை நழுவிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். இன்னொரு முக்கிய விடயம். திரும்பி அனுப்பப்படும் இந்தப் பெண் அங்கே யார் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளார் என்பதே.

அங்கே பெண்ணின் சகோதரன் இருப்பதால் அவரிடம் ராஜினியை ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரிகளும் இசைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக சட்ட ஆலோசனை சம்பந்தபப்ட்ட விடயங்களிலும் தொடர்ந்து பெண்ணின் கணவர் ராசையா ராஜ் மனோகருக்கு உதவி வருகிறோம்.பெண்மணியை மீண்டும் கனடாவிற்கு எடுத்து வருவதற்கான முயற்சிகளை தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் செய்யுமாறு அவரின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments