Latest News

November 16, 2013

ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை - கெலும் மெக்ரே channel 4
by admin - 0

ஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர். ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி செனல் -4 இக்கு மறுக்கப்பட்டுள்ளது அப்படியானால் இலங்கையில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என கெலும் மெக்ரே கேள்வியெழுப்பியுள்ளார். பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கென பிரித்தானிய பிரதமரின் ஊடகக்குழுவின் ஊடாக இலங்கை வந்துள்ள கெலும் மெக்ரே நேற்று மாலை பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் மாநாட்டில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இவ்வாறு ஆவேசம் அடைந்தார். இதனால் பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை பரபரப்பு நிலை காணப்பட்டது. ஊடகமத்திய நிலையத்திற்கு வருகைதந்திருந்த மெக்ரே அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பட்டியலை பார்வையிட்டதன் பின்னர் ஊடகமுகாமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் மெக்ரேயை சுற்றி வளைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்ததுடன் கேள்விக்கணைகளையும் தொடுத்தனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலிகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தால் அது குறித்து ஆவணப்படத்தை தயாரிக்கவும் நான் தயங்க மாட்டேன். செனல்-4 என்பது எப்போதும் உண்மைகளையே வெளியிடும். ஜனாதிபதி மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆகியோர் நடத்தும் செய்தியாளர் மாநாட்டுக்கு செனல் -4 குழுவில் எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஊடக சுதந்திரம் இருப்பதாக கூறப்படும் நாட்டில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் போக்கு காணப்படுகின்றது. என்னைப் புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இதற்கு நான் அஞ்சப் போவதில்லை. அதேநேரம் உண்மையை வெளிக்கொணர்வதற்கும் தயங்கப்போவதில்லை என்றார்.
« PREV
NEXT »

No comments