கிளிநொச்சியில் இராணுவத்தினர் திடீரென ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவடைந்த பின்னர் சற்று இயல்புக்குத் திரும்பிய கிளிநொச்சி தற்பொழுது பதட்டத்துடன் உள்ளது.
கிளிநொச்சி நகர வீதிகளில் சைக்கில்களில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக இவ்வாறான ரோந்து நடவடிக்கைகளை இராணுவத்தினர் மட்டுப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஏ-9 வீதியிலேயே குறிப்பிட்ட படையினர் காலையில் ரோந்தில் ஈடுபடுவது வழக்கம்.
இதேவேளை கிளிநொச்சியில் உள்ள பல கிராமங்களிலும் இராணுவத்தினர் இவ்வாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் கிராமங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறான இந்த ரோந்து நடவடிக்கையில் அதிகளவான துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் பாணியில் இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்
No comments
Post a Comment