Latest News

September 25, 2013

எரிந்த யாழ்.நூலகத்துக்கு நூல்களை சேகரித்தவர் மரணம
by admin - 0

உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம்
திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட
நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர். 1939 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ப.இராமசாமி 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு இவ்வுலகத்தை விட்டு பிரிந்துவிட்டார்
என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன்
திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்தான் இந்த
நா.ப.இராமசாமியுமாவார். எல்லோரும் அழுததுடன் நின்று விட்டார்கள். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி எரிந்து போன
நூலகத்தை புதுப்பிக்க புதிய நூல்களை திரட்ட துவங்கினார். கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத்
தொடங்கினார். பழைய நூல்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னாலும், உடனடியாக
கிளம்பி போய்விடுவார். பகுத்தறிவு, வரலாறு, அறிவியல், புரட்சி, போராட்டம், விடுதலை, மொழி, இனம்,
வீரம், குழந்தைகள் கதை என்று தமிழர் சமுதாயத்துக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்கி குவிக்கத்
துவங்கினார். இடைவிடாத பயணம், தேடல் என்று போன நா.ப.இராமசாமியிடம் இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய
நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாத்து பராமரித்து வந்தார். இராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள். மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள்
1840-ம் ஆண்டு பதிப்பு, இராட்லர் அகராதி (1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள்
என பல அறிய நூல்களை தொகுத்து வைத்துள்ளார். பல நூல்களில்  படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன.
கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு (1875), 1803 இல் வெளியான
சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்), இவை தவிர ஓவியம், சிற்பம், மருத்துவம், மூலிகை,
சமையல்கலை (1912) குறித்த நூல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் அவரிடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஜனவரியில், யாழ்ப்பாணம் சென்ற நா.ப.இராமசாமி, விடுதலை புலிகளின் தலைவர்களையும்
சந்தித்து பேசியுள்ளார். பல நாட்கள் தங்கிப் பல ஊர்களையும் முக்கியமான தலைவர்களையும் கண்டுவந்த
நா.ப.இராமசாமி, ரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புள்ள 3800 நூல்களை  அன்பளிப்பாக வழங்கினார். மீதமுள்ள நூல்கள்  அனைத்தும் யாழ்பாண நூலகத்துக்கு என தன்னுடைய உயிலில் எழுதி வைத்துள்ளார் என்றும்
அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments