லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஈழ ஆதரவு நிகழ்வொன்றில் இலங்கை பல்லைக்கழகங்களை சேர்ந்த நான்கு விரிவுரையாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
லண்டனில் நடைபெற்ற ஈழ ஆதரவு நிகழ்வில் இலங்கை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரியவந்தது.
பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 04 விரிவுரையாளர்களே இந்த மாதம் லண்டன் சென்றுள்ளனர். இவர்களில் சிங்களவர் ஒருவரும் அடங்குகிறார். அந்த விரிவுரையாளர்கள் ஆராய்ச்சி ஒன்றுக்காக லண்டன் செல்வதாக கூறியிருந்தனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்ளவே சென்றதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன் மற்றும் எம். சுமந்திரன் ஆகியோர் கனடாவில் அண்மையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டனர்.
இவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய முடியும். எனினும் அது சட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்தது என்றார்.
No comments
Post a Comment