Latest News

August 26, 2013

நவநீதம்பிள்ளை – ஹக்கீம் சந்திப்பு
by admin - 0


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பு இன்று காலை 11 மணியளவில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பு நிறைவடைந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர் மாநாடொன்றை அமைச்சில் நடத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தகவல் வெளியிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமாக செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பல பொதுவான விடயங்களை நாம் பேசினோம். அவர் என்னிடம் பல கேள்விகளை கேட்டார். குறிப்பாக குற்றவியல் சட்டங்களில் கொண்டுவரப்படும் புதிய திருத்தங்கள் தொடர்பாகவும் நீதிமன்ற அணுகு முறை தொடர்பாகவும் என்னிடம் கேட்டறிந்து கொண்டார்.
யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்தார். இது தொடர்பில் எமது அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பரிந்துரைகள் குறித்து தெளிவுபடுத்தினேன்.
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருப்பதாகவும் அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் கேட்டறிந்தார்.
இதேவேளை, பள்ளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் அவரது கவனம் உள்ளதுடன் இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டார்.
இதற்கு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் நானும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் இணைந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம். இது குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனத் தெரிவித்தேன்.
இதேவேளை, ஏனைய மதங்களை பற்றி இழிவுபடுத்துவதை குற்றமாக கருதும் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளமை குறித்தும் தெரிவித்தேன். மற்றும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சு தொடர்பிலும் பேசினோம். ஆனால் பொலிஸ் திணைக்களம் நீதியமைச்சின் கீழ் கொண்டுவருவது தான் சரியான விடயம் என்ற அபிப்பிராயத்தையும் அவர் வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவரிடம் நான் தெரிவித்தேன்.
பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதும் நடைமுறையில் ஏன் உள்ளது என கேள்வியெழுப்பினார். யுத்தம் நிறைவடைந்த போதிலும் நாட்டில் தற்போதும் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதனால் அதனை அரசு நீக்கும் நிலையில் இல்லை என்பதையும் தெரிவித்தேன்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பிலும் அவர் என்னிடம் கேள்விகளை கேட்டார். பல பொது விடயங்கள் பற்றி என்னுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட அவர் தகவல் அறியும் சுதந்திரம் தொடர்பிலும் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
« PREV
NEXT »

No comments