ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்த பின்னர் மாணவர்கள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர். 300க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொறியியல் கல்லூரிகள் மூடல்: மாணவர்கள் போராட்டத்தை அடுத்து அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியிலும் ஆர்ப்பாட்டம்: இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி பொங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என கோரி பேரணியும் நடத்தினர். இதில் வட மாநில மாணவர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
பிற மாநிலங்களிலும் போராட்டம்: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் மற்ற மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.கர்நாடக வாழ் தமிழர்களும் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஏராளமான தமிழக இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது இவர்கள் வலியுறுத்தினர். மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் தராவி பகுதியில் உள்ள தமிழர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
No comments
Post a Comment