Latest News

January 22, 2013

தொடர்ந்து வெடிக்கும் விடுதலைப் புலிகளின் குண்டுகள் – அச்சத்தில் இராணுவத்தினர்!
by admin - 0

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக இல்லாது போனாலும், அவர்களால் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் இன்னமும் வெடிப்பதாக படைத்தரப்பு கூறுகின்றது.

நேற்று பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதில் பலத்த காயமடைந்த லலித் தாமர என்ற படை வீரரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயமென பேணப்படும் இப்பகுதிகளில் ஏனைய மனிதநேய கண்ணிவெடியகற்றல் அமைப்புக்கள் கண்ணி வெடிகளை அகற்ற தடை விதிக்கப்பட்டே உள்ளது. இந்நிலையில் இராணுவ கண்ணி வெடியகற்றல் பிரிவே கண்ணி வெடியகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களால் புதைக்கப்பட்ட மிதிவெடியே இவ்விபத்திற்கு காரணம் என்று இராணுவத்தின் பலாலி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது மக்கள் நடமாட தடையென அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளை மிதி வெடி அபாயமுள்ள பகுதியாக படைத்தரப்பு கூறி வருவதுடன் மக்கள் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்படுவதற்கு அதனையே காரணமாக கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, யாழ். அச்செழு இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சக பெண் சிப்பாயின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாகவே சுமித்ரா என்ற பெண் சிப்பாய் காயமடைந்தார் என இராணுவ தரப்பு ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments