Latest News

April 07, 2012

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை - ஜோடியாக நடிக்க ரெடி!- சிம்பு, நயன்தாரா
by admin - 0

சேர்ந்து நடிப்பதில் எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. கால்ஷீட் இருந்தால் ஜோடியாக நடிப்போம், என சிம்புவும் நயன்தாராவும் அறிவித்துள்ளனர்.



இதன் மூலம் கடந்த சில நாட்களாக மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர்.

சினிமாவில் எது, யார் எப்படி மாறுவார்கள் என்று கணிக்கக் கூட முடியாது. நயன்தாராவும், சிலம்பரசனும் 'வல்லவன்' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் திடீரென்று இருவரும் பிரிந்தனர். சிம்பு ஒருபக்கம் லூஸுப்பெண்ணே என சோகம் கீதம் பாட, நயன்தாரா துரோகம் செய்தார் சிம்பு என பேட்டி கொடுக்க... அந்த உறவு முறிந்ததாக அறிவித்துவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் காதல் மலர்ந்து. மூன்றரை ஆண்டுகள் நெருக்கமாக இருந்து சமீபத்தில் இருவரும் பிரிந்து பேட்டிகள் கொடுத்து வருவது தெரிந்ததே.

இப்போது, ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள்.

இப்போது சிலம்பரசன் நடிக்கும் 'வாலு' என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்றும், தன்னிடம் சிலம்பரசன் நெருங்கி பழகக்கூடாது, கேரவனுக்குள் வந்து பேசக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்ததாகவும் வெளியான தகவல் கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தியாகிவிட்டது.

ஆனால் இதனை இருவருமே இப்போது மறுத்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "வாலு' பட இயக்குநர் விஜய், அந்த படத்துக்காக என்னிடம் தேதி கேட்டது உண்மை. அந்த படத்துக்கு என்னால் தேதி கொடுக்க முடியவில்லை. நான் இப்போது 3 தெலுங்கு படங்களில் நடிப்பதால், இந்த படத்துக்கும் தேதி கொடுத்தால் குழப்பம் ஏற்படும் என்று அவரிடம் சொன்னேன்.

இதுதொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர், என்னிடம் பேசவும் இல்லை, நான் எந்த நிபந்தனையும் விதிக்கவும் இல்லை. ரூ.3 கோடி சம்பளம் கேட்கவில்லை. கேரவனுக்குள் சிலம்பரசன் நுழையக்கூடாது என்று நிபந்தனை விதிக்கவும் இல்லை. எந்த தயாரிப்பாளரிடமும் நான் நிபந்தனை விதிப்பதில்லை. அப்படிப்பட்ட பெண் நான் அல்ல.

சிம்புவுடன் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை

எனக்கு, சிம்புவுடன் எந்த பிரச்சினையும் கிடையாது. அவருடன் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னிடம் தேதி இருந்தால் மட்டுமே அவர் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால், நடிக்கமாட்டேன். எனக்கும், அவருக்கும் பிரச்சினை என்று நான் சொல்லவில்லை. நானும், சிம்புவும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், ஒன்று அவர் சொல்லவேண்டும், அல்லது நான்தான் சொல்லவேண்டும்," என்றார்.

கால்ஷீட் இருந்தால் நடிப்போம்

"நயன்தாராவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. 'வாலு' படத்தில் நடிப்பதற்கு கேட்டபோது, அவர் நிபந்தனைகள் விதித்ததாக வதந்தியை பரப்புகிறார்கள் (வாலு படத்தில் நடிக்க கேட்கவே இல்லை என்று கூறி வந்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது).

ஒரு தயாரிப்பாளரோ, டைரக்டரோ அவர்கள் படத்துக்கு நயன்தாராவும், நானும் வேண்டுமென்று விரும்பினால், இருவருக்குமே `கால்ஷீட்' இருந்தால் நடிப்பதில் தப்பில்லை. எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை'', என்றார்.

« PREV
NEXT »

No comments